டென்மார்க் செல்லக்கூடிய சிங்கப்பூர் குடியிருப்பாளர்கள் இரு
தரப்பிலும் தடைகாப்பு கட்டுப்பாடு இல்லாத பயணத்தை இனி அனுபவிக்க இயலாது. கொவிட்-19 தொற்றக்கூடிய அதிக ஆபத்துள்ள நாடு என்று சிங்கப்பூரை டென்மார்க் வகைப்படுத்தி இருப்பதே அதற்குக் காரணம்.
இவ்வாறு அறிவிக்கப்பட்டு இருப்பதால் சிங்கப்பூரில் இருந்து செல்லக்கூடிய பயணிகள் டென்மார்க் சென்று சேர்ந்ததும் பத்து நாட்கள் தனிமையில் இருக்கக்கூடிய தடைகாப்பு உத்தரவைக் கடைப்பிடிக்க வேண்டும்.
டென்மார்க் தூதரகம் இதனை நேற்று தனது ஃபேஸ்புக்கில் தெரிவித்து இருந்தது. தடைகாப்புக் காலம் குறைவதற்கும் வாய்ப்பு உண்டு. டென்மார்க்கிற்குள் நுழைந்த நான்காம் நாளில் எடுக்கப்படும் கொவிட்-19 பிசிஆர் பரிசோதனையில் தொற்று இல்லை என்று உறுதியானால் பத்து நாளுக்குக் குறைவாகக் கட்டுப்பாடு இருக்கும்.
சிங்கப்பூர் கடந்த இரு மாதங்
களாக சில ஐரோப்பிய நாடுகளுடன் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கான தடையற்ற சிறப்புப் பயண (விடிஎல்) ஏற்பாட்டைச் செய்து வருகிறது. டென்மார்க், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, சுவீடன், பின்லாந்து மற்றும் பிரிட்டன் ஆகியன அந்த ஐரோப்பிய நாடுகள்.
இந்த ஏற்பாட்டை சிங்கப்பூர் தன்னிச்சையாகச் செய்துகொண்டு உள்ளது. இந்த நாடுகளில் இருந்து வருவோர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக் கொண்டிருந்தால் தடைகாப்புக் கட்டுப்பாடு எதுவும் இன்றி சிங்கப்பூருக்குள் நுழையலாம். சிங்கப்பூர் முடிவெடுப்பதற்கு முன்னரே இந்த பத்து ஐரோப்பிய நாடுகளும் சிங்கப்பூரில் இருந்து வருவோருக்குக் கட்டுப்பாடுகளை விலக்கி இருந்தது.
அதன் மூலம் சிங்கப்பூருக்கும் சிறப்புப் பயண ஏற்பாட்டில் இடம்பெற்றிருக்கும் ஐரோப்பிய நாடு
களுக்கும் இடையே செல்லக்
கூடியவர்கள் இரு நாட்டிலும் தடையற்ற பயணத்தை அனுபவிக்கும் நிலை உருவானது. ஆயினும், தற்போது டென்மார்க் பயணத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

