சிங்கப்பூரின் தமிழ்ப் பட்டிமன்ற பேச்சாளர்கள், உலக அரங்கில் பெரிய அளவில் அறிமுகமாகும் வகையில், முதன் முறையாக சிங்கப்பூரின் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகமும் இந்தியாவின் 'சன்' தொலைக்காட்சிப் புகழ் 'கல்யாண மாலை' அமைப்பும் சேர்ந்து தீபாவளி சிறப்புப் பட்டிமன்றத்தை அரங்கேற்றின.
இந்த நிகழ்ச்சி யூடியூப் கல்யாணமாலையிலும், தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் ஃபேஸ்புக் தளத்திலும் இடம்பெற்றது. இது தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் 112வது நிகழ்ச்சி ஆகும். மெய்மேடையும் மெய் நிகருமாய்க் கைகோர்த்து, கொவிட்-19 காலத்திலும், அதே விறுவிறுப்பும், சுவையும் குறையாத வகையில், நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டது.
தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் தலைவர் திரு அருமைச்சந்திரன் அனைவரையும் வரவேற்றார்.
உலகெங்கிலும் கடந்த 3 நாட்களில் 16,000 ரசிகர்கள் கண்டுகளித்தனர். "அடுத்தவர் வாழ்க்கையை நாம் ஆராய்வது பலமா? பலவீனமா?" என்பது தலைப்பு. சன்டிவி பட்டிமன்றப் புகழ் திரு ராஜாவை நடுவராகக் கொண்டு இம்மாதம் 7ஆம் தேதி தீபாவளியை ஒட்டி கல்யாணமாலை தளத்தில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.
'பலவீனமே' என்ற அணியில் இந்தியாவிலிருந்து புலவர் திரு இராமலிங்கம் சிங்கப்பூரிலிருந்து முனைவர் ராஜி ஸ்ரீநிவாசன், திரு முகம்மது பிலால் ஆகியோரும், 'பலமே' என்ற அணியில் இந்தியாவிலிருந்து திருமதி கவிதா ஜவஹர், சிங்கப்பூரிலிருந்து திருமதி கலைச்செல்வி வைத்யநாதன், திருமதி எசக்கி செல்வி ஆகியோரும் பேச்சாளர்களாக கலந்துகொண்டனர்.
கல்யாணமாலையின் ஆணிவேராகச் செயற்படும் திருமதி மீரா நாகராஜனின் வரவேற்புரையுடன் தொடங்கிய பட்டிமன்றம், நடுவர் திரு ராஜாவால் கலகலப்பாக நடத்திச் செல்லப்பட்டது. பலவீனமே என்ற அணி தொடங்கிய விவாதத்தில் திரு பிலால், "நாம் என்ன காந்திகளோடா வாழ்ந்து கொண்டிருக்கிறோம் பிறர் வாழ்வை ஆராய்ந்து நம்மைப் பலப்படுத்திக் கொள்ள," என்றார். முனைவர் ராஜி ஸ்ரீநிவாசன், தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை என்ற திருமூலர் வழி நம்மை நாம் ஆராய மட்டுமே வாழ்வில் நேரமிருக்கிறது என்றார்.
புலவர் இராமலிங்கம், "பிறரை ஆராயும்போது எதிர்மறை எண்ணங்கள் தாம் மனதில் ஓங்குகிறது. வாழ்க்கையை வாழ நம்மை மட்டுமே ஆராய வேண்டும்," என்றார்.
'பலம்' என்ற அணியின் திருமதி எசக்கி செல்வி, "வெற்றி பெற்று வாழ்ந்தவர்கள் போட்ட பாதையில் நாம் செல்வது எளிது. எனவே ஆராய வேண்டும்," என்றார். அதே அணியைச் சேர்ந்த திருமதி கலைச்செல்வி, அனுபவங்களின் தொகுப்புதான் வாழ்க்கை என்று கண்ணதாசன் வழியைச் சொன்னார்.
திருமதி கவிதா ஜவஹர் நமது தவறுகளைத் திருத்திக் கொள்
வதற்குக்கூட அடுத்தவர் வாழ்க்கையை ஆராய்ந்துதான் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது என்றார்.
மெய்மேடையில் ஒளிப்பதிவான இந்த இரண்டு மணிநேர நிகழ்ச்சியை, ஏற்பாடு செய்த தமிழ்ப் பட்டிமன்றக் கலைக்கழகம் அனைவராலும் பாராட்டப்பட்டது. உலகெங்கிலும் இலட்சக்கணக்கான திருமணங்களை நடத்தி வைத்திருக்கும் கல்யாணமாலை திரு மோகன் நன்றியுரை ஆற்ற நிகழ்ச்சி இனிதே முடிவுற்றது.

