சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ( எஸ்ஐஏ) குழுமத்தின் ஏறக்குறைய அனைத்து விமானிகளும் சிப்பந்திகளும் மீண்டும் பறக்கத் தொடங்கியுள்ளனர். விமானப் பயணத்துக்கு மீண்டும் புத்துயிர் அளிக்கும் வகையில் எஸ்ஐஏ விரைவாக தனது செயற்பாட்டைத் துரிதப்படுத்துகிறது.
"எஸ்ஐஏ குழுமத்தின் 92% விமானிகளும் 86% சிப்பந்திகளும் இப்போது பறக்கிறார்கள் என்று கூறினார்," குழுமத்தின் தலைமை நிர்வாகி கோ சூன் ஃபோங். நேற்று நடைபெற்ற நிறுவனத்தின் அரையாண்டு முடிவுகளுக்கான செய்தியாளர் கூட்டத்தின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எஸ்ஐஏ குழுமம் தற்போது தொற்றுநோய்க்கு முன்னர் செயற்பாட்டில் சுமார் 37 விழுக்காட்டில் இயங்குகிறது. மேலும், இது டிசம்பரில் 43 விழுக்காடாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
16 நாடுகளுடன் தடுப்பூசி போடப்பட்ட பயணப் பாதைகளை (விடிஎல்) சிங்கப்பூர் அறிவித்ததன் மூலம் விமானப் பயணம் மீண்டு வருவதற்கான நம்பிக்கை துளிர் விட்டிருக்கிறது.
செயல்பாடுகள் பற்றிய ஆகக் கடைசி தகவலறிவைக் கட்டிக்காக்க பெரும்பாலான பணியாளர்கள் ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் ஒரு விமானத்தில் அனுப்பப்படுகிறார்கள். மொத்தம் 135 எஸ்ஐஏ மற்றும் ஸ்கூட் விமானங்கள் மீண்டும் இயக்கத்தில் உள்ளன.
எஸ்ஐஏயின் விமானச் சேவைகளில் பணியாற்றும் சிப்பந்திகளும் விமானிகளும் இப்போது கொவிட்-19 க்கு எதிரான தடுப்பூசியை முழுமையாக போட்டுள்ளனர் என்று திரு கோ கூறினார். ஸ்கூட்டின் சிப்பந்திகளுக்கும் விமானிகளுக்கும் டிசம்பர் மாதத்திற்குள் முழுமையாக தடுப்பூசி போடப்படும்.
இதற்கிடையே, விமானப் பயணத்திற்குத் திரும்பாத சில சிப்பந்திகளும் விமானிகளும் எஸ்ஐஏ குழுமத்தின் பிற பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறார்கள் அல்லது ஊதியம் இல்லாத விருப்ப விடுப்பில் வைக்கப்படுகிறார்கள். மற்றவர்கள் மருத்துவமனைகள் போன்ற பிற நிறுவனங்களுக்கு அனுப்பப்படுகின்றனர்.
"படிப்படியாக, அவர்கள் திரும்பி வருவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆனால் இந்த நேரத்தில் அவர்கள் எப்போது பணிக்குத் திரும்புவார்கள் என்று சொல்ல முடியாது, " என்று திரு கோ கூறினார்.
இதற்கிடையே, லண்டனுக்கு செல்லும் பயணிகளுக்கு அதிக விமானத் தேர்வுகள் இருக்கும். மலிவுக் கட்டண விமானமான ஸ்கூட் சிங்கப்பூரிலிருந்து லண்டனுக்கு டிசம்பர் 16ஆம் தேதி அன்று சேவையைத் தொடங்கும்.
பேங்காக் வழியாக லண்டனின் கேட்விக் விமான நிலையத்திற்கான விமானங்கள் ஆரம்பத்தில் வாரத்திற்கு மூன்று முறை என்று இரண்டு வாரங்களுக்கு மட்டுமே செயல்படும். அதன் பின்னர் அடுத்த ஆண்டு மார்ச் 22ஆம் தேதி அன்று மீண்டும் தொடங்கும்.
பேங்காக்கில் நிறுத்தப்படும் நேரம் உட்பட, பயணம் நேரம் சுமார் 16½ மணிநேரம் ஆகும் என்றும் ஒரு வழி பயணச் சீட்டுகளின் விலை $434லிருந்து தொடங்கும்.
300க்கும் மேற்பட்ட பயணிகள் அமரக்கூடிய அகலமான போயிங் 787 டிரீம்லைனர் விமானங்களைப் பயன்படுத்துவதாக ஸ்கூட் கூறியது.