ஏபெக் எனப்படும் ஆசிய பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்கள் இந்த ஆண்டு மெய்நிகர் முறையில் சந்தித்து கூட்டம் நடத்தினார்கள்.
இருந்தாலும், வழிவழியான ஒரு மரபைக் கடைப்பிடிக்க அவர்கள் தவறவில்லை. மாநாட்டை இந்த ஆண்டு நடத்திய நியூசிலாந்து, அதில் கலந்துகொள்ளும் 21 நாடுகளின் தலைவர்களுக்கும் நீலநிறத் துண்டையும் பச்சைநிற மாணிக்கக் கல் அணிகலனையும் அனுப்பி இருந்தது.
தலைவர்கள் அவற்றை அணிந்துகொண்டு கூட்டத்தில் கலந்துகொண்டார்கள். இதன்மூலம் அவர்கள் தங்கள் ஒற்றுமையை உறுதிப்படுத்தினர்.
பிரதமர் லீ சியன் லூங், தம்முடைய படத்தையும் மற்ற தலைவர்களின் படத்தையும் ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். கண்ணைக் கவரும் அந்தப் படங்கள் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.