மனநல புரிந்துணர்வை மேம்படுத்த தொண்டூழியர்கள் பணி மிக முக்கியம் என்று கலாசார, சமூக இளையர்துறை அமைச்சுக்கான நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா தெரிவித்தார்.
கொவிட்-19 காரணமாக ஏற்பட்டு இருக்கும் மனநலப் பிரச்சினைகளைப் பற்றிய புரிந்துணர்வை மேம்படுத்த மேலும் அதிக தொண்டூழியர்கள் தேவை என்று அவர் குறிப்பிட்டார்.
அதோடு மட்டுமின்றி, அக்கம் பக்கத்தினரையும் அன்புக்குரியவர்களையும் கண்காணித்து வருவதில் ஒவ்வொருக்கும் பணி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
'சில்வர் ரிப்பன் சிங்கப்பூர்' என்ற மனநல ஆலோசனை அமைப்பின் நீண்டகால சேவை விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில் கலந்துகொண்டு திரு சுவா உரையாற்றினார்.
நேற்றைய நிகழ்ச்சியில் 15 தொண்டூழியர்கள் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டனர். அவர்கள் ஐந்து முதல் 15 ஆண்டு காலம் தொண்டூழியத்தில் ஈடுபட்டு மக்களின் மனநலம் மேம்பட பாடுபட்டு வந்திருக்கிறார்கள்.
சில்வர் ரிப்பன் அமைப்பு கடந்த 15 ஆண்டு காலத்தில் 860,000க்கும் அதிகமானவர்களுக்கு நன்மை செய்துள்ளதாக திரு சுவா குறிப்பிட்டார். சில்வர் ரிப்பன் அமைப்பின் நிர்வாக சபை உறுப்பினர்களும் நேற்று சிறப்பிக்கப்பட்டவர்களில் அடங்குவர்.
மாடர்ன் மாண்டிசோரி இன்டர்நேஷனல் குழுமத்தின் தலைவரும் தலைமை நிர்வாகியுமான டாக்டர் டி. சந்துருவும் அவர்களில் ஒருவர்.
சில்வர் ரிப்பன் அமைப்பின் அடிப்படை நோக்கமே மக்களுக்கு உதவுவதுதான் என்று டாக்டர் சந்துரு, 67, (படம்) தெரிவித்தார்.

