சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே நிலம்வழிப்
பயணம் இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்கக்கூடும். தடுப்பூசிப் பயணத்தடத் திட்டத்தைப் போன்ற ஓர் பயண ஏற்பாட்டின்கீழ் இது சாத்தியமாகும். கொவிட்-19 தொற்றுக்கெதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழு நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பேசிய வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங், இதன் தொடர்பில் மலேசியாவுடனான பேச்சுவார்த்தை நல்ல முன்னேற்றம் கண்டு வருவதாகத் தெரிவித்தார். ஆனால், அதுகுறித்த மேல்விவரங்களை அவர் வெளியிடவில்லை.
"இன்னும் ஒரு சில வாரங்களில் நிலம்வழிப் பயணத்தைத் தொடங்க நாங்கள் செயல்பட்டு வருகிறோம்," என்றார் அவர்.
சிங்கப்பூருக்கும் கோலாலம்பூருக்கும் இடையே நவம்பர் 29ஆம் தேதியிலிருந்து விடிஎல் எனப்படும் தடுப்பூசிப் பயணத்தடத் திட்டம் தொடங்கப்படும் என முன்னதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. இது, விமானப் பயண ஏற்பாடாகும். சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே நிலம்வழிப் பயணம் எப்போது தொடங்கும் என இருநாட்டு மக்களும் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். கொவிட்-19க்கு முந்தைய சூழலில், உட்லண்ட்ஸ் கடற்பாலம்
மற்றும் துவாஸ் இரண்டாவது இணைப்புப் பாலம் வழியாக தினமும் சுமார் 415,000 பேர் சென்று வந்தனர்.