'மின்னிலக்க வாழ்வு நிதி' என்ற அரசாங்கத்தின் நிதித் திட்டத்தில் $4.8 மில்லியன் சேர்க்கப்படும்.
மின்னிலக்கத் தொழில்நுட்பம் வழி 100,000 மக்கள் பலன் அடையும் வகையில் 21 புதிய அடிப்படை சமூகத் திட்டங்களுக்கு அந்த நிதி மூலம் ஆதரவு அளிக்கப்படும்.
அதிபர் ஹலிமா யாக்கோப் நேற்று இதனை அறிவித்தார். அதிபரும் தகவல், தொடர்பு அமைச்சர் ஜோசஃபின் டியோவும் 'எஸ்பிடி' என்ற அறப்பணி அமைப்பை நேற்று பார்வையிட்டனர்.
அப்போது அதிபர் இந்த அறிவிப்பை விடுத்தார்.
மின்னிலக்க வாழ்வு நிதியைக் கடந்த பிப்ரவரி மாதம் தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் $2.5 மில்லியன் நிதியுடன் அமைத்தது.
இன்றைய தேதியில் நிறுவனங்கள், சமூகத்திடம் இருந்து $7.6 மில்லியன் திரட்டப்பட்டுள்ளது. அந்த நிதி மூலம் பயன்படக்கூடிய ஓர் அமைப்பாக எஸ்பிடி அமைப்பு இருக்கிறது.
எஸ்பிடி அறப்பணி அமைப்பு, தன்னுடைய மின்னிலக்கச் செயல்திட்டம் ஒன்றின் கீழ் நடத்தும் பயிற்சி வகுப்புகளை அதிபரும் அமைச்சரும் பார்வையிட்டனர்.
அந்தப் பயிற்சி வகுப்புக்கு 'மைக்ரோசாஃப்ட்' நிறுவனமும் 'எஸ்ஜி எனேபில்' இயக்கமும் ஆதரவு அளிக்கின்றன. அந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு இரு நிலை 2ஏ வகுப்புகளை முடித்த நான்கு பேருக்கு அதிபர் சான்றிதழை வழங்கினார்.
அந்த வகுப்புகளில் முதல் நிலையில் டிரேஸ்டுகெதர், வாட்ஸ்அப் போன்ற செயலிகளைப் பயன்படுத்த உடற்குறையுள்ளோர் கற்றுக்கொள்கிறார்கள்.
அந்தப் படிப்பின் இரண்டாவது நிலையில், சிங்பாஸ், இணையப் பாதுகாப்பு நடைமுறைகள் போன்ற அரசாங்க மின்னிலக்கச் சேவைகளைப் பயன்படுத்துவது பற்றி அவர்களுக்குப் கற்பிக்கப்படுகிறது.

