சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களின் மருத்துவப் பராமரிப்புக்காக, 'ஹெல்த்சர்வ்' என்ற அரசு சார்பற்ற மருத்துவ அமைப்பு ரிபப்ளிக் பலதுறை கல்லூரியுடன் சேர்ந்து நிதி திரட்டும் இயக்கம்(#ManyHelpingHands) ஒன்றைத் தொடங்கி உள்ளது.
இந்த அமைப்பின் வழிகாட்டலுடன், விரிவுரையாளர்கள் மேற்பார்வையின் கீழ் அந்தக் கல்லூரியில் நிர்வாகம், தொடர்புத் துறையில் இரண்டாம் ஆண்டு பயிலும் மூன்று மாணவர்கள் நிதி திரட்டும் இயக்கத்திற்குத் தலைமை ஏற்றுள்ளனர்.
'ஹெல்த்சர்வ்' கடந்த 15 ஆண்டுகளாகவே வெளிநாட்டு ஊழியர்களுக்கு கட்டுப்படியாகக்கூடிய செலவில் முழுமையான சுகாதாரப் பராமரிப்பை அளித்து வருகிறது.
கேலாங்கில் அது நடத்தும் மருந்தகத்தில் மருந்து உட்பட மருத்துவரைப் பார்க்க $8 முதல் $15 வரைதான் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
வேலைபார்க்க இயலாத சிறப்பு அனுமதி தாரர்களுக்கு அங்கு கட்டணம் இல்லை.
அந்த மருந்தகத்திற்குச் செல்லும் வெளிநாட்டு ஊழியர்களில் பாதிப்பேருக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற ஏதாவது ஒரு உடல்நலப் பாதிப்பு இருக்கிறது என்பதை 'ஹெல்த்சர்வ்' சுட்டிக்காட்டியது.
வேலை இடத்தில் காயம் அடையும் ஊழியருக்கு மறுவாழ்வு பயிற்சி சிகிச்சை, அவசர பல் சிகிச்சை தேவைப்படக்கூடிய ஊழியர்கள் உள்ளனர்.
கொவிட்-19 காரணமாக அனைத்துலக எல்லைகள் மூடப்பட்டுவிட்டதால் இந்த அமைப்பின் நோய் சிகிச்சை செயல்திட்டத்திற்குக் கடந்த இரண்டு ஆண்டுகளில் தேவை தொடர்ந்து அதிகரித்துள்ளது என் பதையும் 'ஹெல்த்சர்வ்' அறிக்கை ஒன்றில் சுட்டியது.
நன்கொடை வழங்க விரும்புவோர் https://www.giving.sg/healthserve-ltd/help_migrant_workers_heal என்ற முகவரி மூலம் தொடர்புகொள்ளலாம்.
திரட்டப்படும் ஒவ்வொரு வெள்ளிக்கும் பந்தயப்பிடிப்புக் கழகத்திடம் இருந்து ஒரு வெள்ளி கிடைக்கும். ஆக அதிகமாக அந்தக் கழகம் $250,000 கொடுக்கும்.
பிரச்சினையை எதிர்நோக்கும் வெளிநாட்டு ஊழியரைப் பற்றி யாருக்காவது தெரிந்தால், வெளிநாட்டு ஊழியருக்கு உதவி தேவை என்று யாராவது கருதினால் அவர்கள்+65 3129 5000 என்ற எண் மூலம் தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப் பட்டு உள்ளது.