சிங்கப்பூரிலும் மலேசியா, இந்தோனீசியா, பிலிப்பீன்ஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் கிராப் (Grab) வாடகை வாகனச் செயலியைப் பயன்படுத்துவோருக்கு தொடர்ந்து 2வது நாளாக நேற்று சேவைத் தடை ஏற்பட்டது. கிராப் செயலியின் சேவை செயலிழந்த ஆக மோசமான சம்பவம் இதுவாகக் கருதப் படுகிறது.
செயலியைப் பயன்படுத்துவோர் பல்வேறு தேவைத் தடைகளை எதிர்நோக்கினர்.
அவர்களால் பயணத்துக்கு வாகனத்தை முன்புதிவு செய்ய முடியவில்லை. அல்லது உணவு விநியோகச் சேவைகளைப் பயன்படுத்த இயலவில்லை.
பயணச் சேவைகளை வழங்கிய கிராப் வாகனமோட்டிகள், தங்களால் பயண முன்பதிவுகளைப் பெற முடியவில்லை என்று கூறினர்.
தேவைத் தடை ஏற்பட்டதை, சிங்கப்பூரில் உள்ள கிராப் நிறுவனப் பேச்சாளர் ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் உறுதிசெய்தார்.
இந்த வட்டாரத்தில் உள்ள பல பங்காளிகளையும் செயலியைப் பயன்படுத்துவோரையும் அது பாதித்தது என்று கூறினார்.
கடந்த செவ்வாய்க்கிழமை முற்பகலுக்குள் பெரும்பாலான சேவைகள் மீண்டும் இயங்கத் தொடங்கி விட்டதாக அவர் சொன்னார்.
எனினும், சிலருக்கு அவ்வப்போது சேவைத் தடைகள் ஏற்பட்டன என்றும் அந்தப் பேச்சாளர் கூறினார்.
பிரச்சினைகளை சரிசெய்ய தாங்கள் கடுமையாகப் பணியாற்றி வருவதாகவும் பாதிக்கப்பட்டவர் களிடம் நிறுவனம் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வாடிக்கையாளர்களும் உணவு விநியோகச் சேவை வழங்குவோரும் சேவைத் தடை பற்றி புகார் அளித்தனர். சிலர், சேவைத் தடை பற்றி கிராப் தங்களுக்குத் தெரிவித்திருக்க வேண்டும் என்றனர்.
கிராப் சேவையை நேற்று பிற்பகலில் தமிழ் முரசு சோதித்துப் பார்த்தது. அதனால் செயலியில் கூடுதல் பணம் நிரப்பவும் வாகனத்தை முன் பதிவு செய்யவும் முடிந்தது.

