தத்தெடுத்து வளர்த்த பெண் பிள்ளையை பல ஆண்டு காலம் பாலியல் துன்புறுத்தல் செய்த ஆடவருக்கு நேற்று நீதிமன்றத்தில் 32 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 50 வயதைக் கடந்தவர் என்பதால் அந்த ஆடவருக்குப் பிரம்படிக்குப் பதிலாக கூடுதலாக 10 வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
வயது குறைந்த சிறுமியை மானபங்கம் செய்த குற்றத்தையும் மானபங்கம் செய்த மற்றொரு குற்றத்தையும் அவர் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து தண்டனை அறிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுமி 2009ஆம் ஆண்டு ஆறு வயதாக இருந்தபோது தமது தந்தை என்று நம்பிய ஆடவரால் முதன்முதலாக பாலியல் சீண்டலுக்கு ஆளானார். அது பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது. இருப்பினும் கடந்த ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி தமது பள்ளியின் தலைமை ஆசிரியரிடமும் ஆலோசகரிடமும் தமக்கு நேர்ந்து வரும் பாலியல் துன்புறுத்தல் குறித்துத் தெரிவித்ததைத் தொடர்ந்து போலிசில் புகார் தெரிவிக்கப்பட்டது. அப்போதுதான் தாம் தத்தெடுக்கப்பட்ட பிள்ளை என அச்சிறுமிக்குத் தெரிய வந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. அவரது அடையாளத்தைப் பாதுகாக்கும் பொருட்டு அவரது பெயரும் குற்றவாளியின் பெயரும் வெளியிடப்படவில்லை.
தற்போது 65 வயதாகும் அந்த ஆடவர் கைது செய்யப்படும் வரை தமது மனைவியுடன் சேர்ந்து உணவுக்கடை நடத்தி வந்தார். 2014ஆம் ஆண்டு தொடக்கநிலை 5ல் தமது பள்ளியில் பாலியல் கல்வி கற்றபோது பாலியல் துன்புறுத்தல் செயல்கள் குறித்து அச்சிறுமிக்குத் தெரிய வந்தது.
தாம் தந்தை என நம்பிய ஆடவர் தம்மை பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதையும் அவர் செய்வது தகாத செயல் என்பதையும் அப்போது அச்சிறுமி உணர்ந்தார். இருப்பினும் இதனை வெளியில் சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் என்று அவர் பயந்ததாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் டே ஜிங்ஸி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

