சிங்கப்பூரின் முதல் 'ஜயன்ட் பாண்டா' எனப்படும் பெரிய பாண்டா கரடியின் குட்டி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 'ரிவர் வொண்டர்ஸ்' என்று அண்மையில் பெயர் மாற்றம் கண்ட 'ரிவர் சஃபாரி' பூங்காவில் மக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இக்கரடிக் குட்டி பிறந்து நாளை 100 நாட்கள் ஆகிறது.
முதலில் வரும் வாரங்களில் பார்வையாளர்கள் இந்தப் பாண்டா குட்டியை 'ஜயன்ட் பாண்டா ஃபாரஸ்ட் எக்சிபிட்' எனப்படும் பெரிய பாண்டா கரடிகளுக்கான கூடத்தில் காணலாம். அதற்குப் பிறகு இச்செல்லப் பிள்ளை தனது தாயுடன் பொதுக் காட்சியகத்தில் வைக்கப்படும்.
இதன் உடல் எடை சுமார் ஆறு கிலோகிராம். இதன் தாயின் பெயர் ஜியா ஜியா. சிங்கப்பூரும் சீனாவும் இணைந்து பிள்ளையின் பெயரை அடுத்த மாதம் வெளியிடும். பெயரை வைக்கப் பொதுமக்கள் பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளனர்.

