இருபத்தொரு வயதில் மூன்று வெவ்வேறு பெண்களைக் கருவுறச் செய்து, இரண்டு பிள்ளைகளைப் பெற்ற ஆடவருக்கு நேற்று குறைந்தது ஓராண்டு சீர்திருத்தப் பயிற்சி விதிக்கப்பட்டது.
பிள்ளை பெற்ற இரண்டு பெண்களில் ஒருவர், பதினைந்து வயதில் ஆடவருடன் பாலியல் உறவு கொண்டார். அவர் அப்போது சட்டப்படி வயதுக்கு வரவில்லை.
மற்றொருவருக்குத் தற்போது வயது 18 ஆகும். ஆடவர் அவருடன் உடலுறவு கொண்டபோது, சட்டப்படி வயதுக்கு வந்திருந்தார்.
மூன்றாவதாக, 12 வயது சிறுமியைக் கருவுறச் செய்திருக்கிறார் அந்த ஆடவர். ஆனால் சிறுமிக்குக் கருக்கலைப்பு செய்யப்பட்டது.
மூன்று பெண்களும் வெவ்வேறு காலகட்டங்களில் அவரது காதலிகளாக இருந்தவர்கள். ஆனால் அவர்கள் இப்போது அவரைப் பிரிந்து விட்டனர்.
சட்டப்படி வயதுக்கு வராத வருடன் பாலியல் உறவு கொண்ட நான்கு குற்றச்சாட்டுகளை ஆடவர் கடந்த ஜூலை 13ஆம் தேதி ஒப்புக்கொண்டார்.
தற்போது 18 வயதிருக்கும் முன்னாள் காதலியைத் தாக்கியதன் பேரில் ஒரு குற்றச்சாட்டையும் அவர் ஒப்புக்கொண்டார்.
குற்றவாளிக்கு தண்டனை விதிக்கப்பட்டபோது, மேலும் 17 குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன. அவை பெரும்பாலும் சட்டப்படி வயதுக்கு வராத பெண்களுடன் பாலியல் உறவு கொண்டதன் தொடர்பானவை. கடந்த 2017ஆம் ஆண்டு முதல் சென்ற ஆண்டு வரை அந்த ஆடவர் குற்றங்களைப் புரிந்தார்.
குற்றம் புரியத் தொடங்கியபோது ஆடவருக்கு வயது 16 என்பதால் சட்டப்படி அவர் பெயரை வெளியிட முடியாது.
பெண்களின் பெயர் விவரங்களை வெளியிடக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குற்றம் புரிந்த ஆடவர் குறைந்தது ஓராண்டு சீர்திருத்தப் பயிற்சி யின்போது தடுத்துவைக்கப்படுவார்.
குற்றவாளிக்கு நேற்று $15,000 பிணை நிர்ணயிக்கப்பட்டது.
தண்டனைகாலத்தைத் தொடங்க அவர் அடுத்த மாதம் 17ஆம் தேதி அரசு நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
பதினான்கு வயதுக்குக்கீழ் உள்ள சிறுவருடன் பாலியல் உறவு கொள்வோருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, பிரம்படி அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.

