சிங்கப்பூர்-மலேசியா தரைப்பாலம் இந்த மாத முடிவில் திறக்கப்படலாம் என்று கொவிட்-19 அமைச்சு கள்நிலை பணிக்குழு நேற்றுத் தெரிவித்தது. முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயண ஏற்பாட்டை நடப்புக்குக் கொண்டு வருவது பற்றி இந்த இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
தரை எல்லையை இந்த மாத முடிவில் திறக்கலாம் என்று தாங்கள் நம்புவதாக கொவிட்-19 பணிக்குழுவின் இணைத் தலைவர் கான் கிம் யோங் தெரிவித்தார்.
என்றாலும் திறக்கப்படும் தேதி எதையும் அவர் உறுதிப்படுத்தவில்லை. அடுத்த வாரம் மேல்விவரங்கள் அறிவிக்கப்படும் என்றும் சிங்கப்பூரர்கள் தேவையான ஏற்பாடுகளைச் செய்துகொள்ள காலஅவகாசம் இருக்கும் என்றும் திரு கான் குறிப்பிட்டார்.
தொடக்கத்தில் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட அளவுடன் பயணிகளின் எண்ணிக்கைக்கு வரம்பு விதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.
இங்கு சிங்கப்பூரில் வேலை பார்க்கும் சிலர் மலேசியா சென்று தங்கள் குடும்பத்தாரைச் சந்திக்க விரும்புகிறார்கள். மலேசியாவில் வேலை பார்க்கும் சிங்கப்பூரர்கள் இங்கு திரும்பிவர விரும்புகிறார்கள் என்பதை அவர் சுட்டினார்.
ஆகையால் தரைவழிப் பயண ஏற்பாட்டின் முதல் கட்டம் இத்தகைய பயணிகள் மீது ஒருமித்த கவனம் செலுத்தக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.