வெளிநாட்டுப் பயணிகள் சிங்கப்பூர் வர, தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயண அனுமதியைப் பெறுவதற்கான 'சேஃப் டிராவல்' இணையப் பக்கம் நேற்று சில மணிநேரம் முடங்கியது.
மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் வர விரும்புவோருக்கான விண்ணப்பங்கள் இன்று காலை தொடங்கிய நிலையில், இணையப்பக்கம் முடங்கியது.
நண்பகல் வாக்கில் அந்த இணையப் பக்கம் முடங்கியதாக நம்பப்படுகிறது. இணையப் பக்கத்தில் பராமரிப்புப் பணிகள் நடப்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பிற்பகல் 3 மணிக்கு அந்த இணையப்பக்கத்திற்குச் சென்று பார்த்தபோது, அது மீண்டும் செயல்படுவது தெரிந்தது. எனினும், ஒரே நேரத்தில் அதிகமானோர் அந்த இணையப்பக்கத்தை நாடுவதால், விண்ணப்பம் செய்ய முடியாதோர் பிறகு மீண்டும் முயற்சி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது.
இதுகுறித்து குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்தை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் தொடர்பு கொண்டது.
அதற்குப் பதிலளித்த ஆணையம், "பொதுமக்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இணையப்பக்கத்தை வழக்கநிலைக்குக் கொண்டுவர நாங்கள் முற்படும் வேளையில், பொதுமக்களின் புரிதலை நாடு கிறோம்," என்றது.
மலேசியாவிலிருந்து குறுகியகால வருகையாளர்களும் நீண்டகால அனுமதி அட்டை வைத்திருப்போரும் சிங்கப்பூர் வருவதற்கான பயண அனுமதி விண்ணப்பங்கள் நேற்று காலை 10 மணிக்குத் தொடங்கின.
இந்தியாவிலிருந்தும் இந்தோனீசியாவிலிருந்தும் வருவோருக்கான விண்ணப்பங்கள் நேற்று மாலை 6 மணிக்குத் தொடங்கின.
இணையப்பக்கத்திற்கு வருவோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.