பணியிடத்தில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் சிக்கிக்கொண்ட இந்திய ஊழியர் ஒருவர், கடந்த வியாழக்கிழமை (நவம்பர் 18) உயிரிழந்தார்.
சாங்கி விமான நிலையத்தின் 5ஆம் முனையத்துக்கான கட்டுமானப் பணிகளை உள்ளடக்கும் சாங்கி ஈஸ்ட் திட்டத்துக்கான பணியிடத்தில் அவர் வேலை செய்துகொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது.
தானா மேரா கோஸ்ட் ரோட்டில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இதுகுறித்து அன்றிரவு 8.05 மணியளவில் போலிசுக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
அந்த 43 வயது ஊழியர் இயக்கிக்கொண்டிருந்த ‘வைப்ரேட்டரி ரோல்லர்’ எனும் இயந்திரம் ஒன்று கவிழ்ந்ததில் அவர் அதில் சிக்கிக்கொண்டார்.
‘ஐஎன்ஏ ஹேவி மஷினரி அண்ட் இக்விப்மண்ட்’ எனும் நிறுவனத்தில் அந்த ஊழியர் பணியாற்றினார். அவர் சிக்கிக்கொண்ட அந்த இயந்திரத்தின் எடை ஏறக்குறைய 10 டன் எனக் கூறப்படுகிறது.
அவருடைய சக ஊழியர்கள் அவரை இயந்திரத்தில் இருந்து மீட்டதாக நம்பப்படுகிறது. சாங்கி பொது மருத்துவமனைக்கு அவர் கொண்டுசெல்லப்பட்டபோது அவருக்கு சுயநினைவு இல்லை. காயங்கள் காரணமாக அவர் அங்கு உயிரிழந்தார்.
மனிதவள அமைச்சும் போலிசும் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்துகின்றன.
அந்த ஊழியரின் மரணத்தில் சூது எதுவும் இருந்ததாகச் சந்தேகமில்லை.
உயிரிழந்த அந்த ஊழியரின் குடும்பத்துக்கு உதவி வழங்கப்பட்டு வருகிறது.