எஸ்பிஎஸ் டிரான்சிட் மீது வழக்குத் தொடர்ந்த 13 பேருந்து ஓட்டுநர்கள் தங்கள் வழக்கறிஞர் எம். ரவியை வழக்கிலிருந்து விலக்கியுள்ளனர்.
இந்த வழக்கின் முதன்மை வாதியான திரு சுவா குவாங் மெங், நீதிபதி ஆட்ரி லிம் மற்றும் எஸ்பிஎஸ் டிரான்சிட்டின் வழக்கறிஞர், மூத்த வழக்கறிஞர் தவிந்தர் சிங் ஆகியோரிடம் திரு ரவியின் நடத்தையால் ஓட்டுநர்கள் மிகவும் சங்கடமடைந்துள்ளனர் என்று நேற்று முன்தினம் நடந்த வழக்கு விசாரணையின்போது வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
திரு ரவி, நீதிபதி லிம் சார்புடையவர் என்று குற்றம் சாட்டியிருந்தார். மேலும் அவர் வழக்கை விசாரிப்பதில் இருந்து தன்னை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று கோரினார்.
அவர்கள் நிர்வாக விஷயங்களைப் பற்றி விவாதிக்கும்போது அவர் திரு சிங்கை "கோமாளி" என்றும் அழைத்தார். இந்த நடவடிக்கைகள் காணொளிச் சந்திப்பு உரையாடல் மூலம் நடைபெற்றது.
"திரு ரவியின் நடத்தையை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நேற்று அவர் நடந்து கொண்ட விதம் அவர் மீது நம்பிக்கை வைத்திருந்த எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. அவர் மீது நாங்கள் வைத்த நம்பிக்கையை அவர் பாழ்படுத்தி விட்டார். எங்கள் வழக்கின் போக்கை அவரது நடவடிக்கை பெரிதும் பாதித்துவிட்டது," என்று திரு சுவா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஓட்டுநர்கள் இதுவரை திரு ரவிக்கு $55,000க்கும் மேல் பணம் செலுத்தியுள்ளனர் என்றும் அவர் கூறினார். இந்த பணம் பொதுமக்கள் நன்கொடை மூலம் திரட்டப்பட்டது.
நேற்று முன்தினம் நடந்த விசாரணையின்போது, திரு ரவி நியாயமான விசாரணைக்கான உரிமையை மீறியதாகவும், அவர் மீதிருந்த நம்பிக்கை குலைந்துவிட்டது என்றும் மேலும், "இந்த சட்ட விரோத நடவடிக்கைகளில் ஓட்டுநர்கள் பங்கேற்க விரும்பவில்லை," என்றும் அவர் கூறினார்.
"சிங்கப்பூர் நீதித்துறையின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், வழக்கைத் தொடர நாங்கள் விரும்பவில்லை என்றும் திரு ரவி நேற்று கூறிய குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை," என்று திரு சுவா நேற்று கூறினார்.
பேருந்து ஓட்டுநர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உத்தேசித்துள்ளதாகவும், தற்போது புதிய வழக்கறிஞரைத் தேடிக்கொண்டிருப்பதாகவும் திரு சுவா மேலும் கூறினார். கூடுதல் நேர ஊதியம் மற்றும் பணி நேரம் தொடர்பாக பேருந்து ஒட்டுநர்களுக்கும் பேருந்து நிறுவனத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டதையடுத்து இந்த வழக்கு நடந்தது.
உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பிய கடிதத்தை நேற்று முன்தினம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பார்த்தது. திரு சுவா புதிய வழக்கறிஞர் நியமிக்கப்படும்வரை நடவடிக்கைகளை ஒத்திவைக்குமாறு கோரினார். நீதிபதி லிம்மின் வழக்கிலிருந்து தன்னை விலக்கிக்கொள்வது தொடர்பான எந்த விண்ணப்பத்தையும் தொடரப்போவதில்லை என்றும் அவர் கூறினார்.
நவம்பர் 29ஆம் தேதிக்குள் வழக்கு தொடர்பான அனைத்து தொடர்புடைய ஆவணங்களையும் மற்றும் பணம் செலுத்தியதற்கான முழு அறிக்கையையும் ஒப்படைக்குமாறு திரு ரவியிடம் திரு சுவா கேட்டுக் கொண்டுள்ளார்.
"இந்த விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் சங்கத்தில் புகார் அளிக்க எனக்கு உரிமை உள்ளது," என்று திரு ரவிக்கு எழுதிய கடிதத்தில் திரு சுவா கூறினார்.

