கொவிட்-19 கிருமித் தொற்றிலிருந்து வீட்டில் குணமடையும் திட்டத்தின் நிர்வாகத்தை சிங்கப்பூர் ஆயுதப் படைகள் சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்கவிருக்கிறது.
தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் நேற்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் இதைத் தெரிவித்தார்.
ஆனால் திட்டத்தின் நிர்வாகம் எப்போது சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்கப்படும் என்று அவர் குறிப்பிடவில்லை.
அறிகுறிகள் இல்லாத அல்லது இலேசான அறிகுறிகள் உள்ள நோயாளிகள் பெரும்பாலானவர்கள் இத்திட்டத்தின்கீழ் வீட்டில் இருந்தபடி குணமடைந்து வருகிறார்கள். இவர்களுக்கான பாராமரிப்பு வழிகாட்டுதலை சிங்கப்பூர் ஆயுதப் படைகள் குழு வழங்கி வருகிறது.
திட்டத்தை நிர்வகிக்கும்படி பணிக்கப்பட்ட சிங்கப்பூர் ஆயுதப்படைத் தலைவர்களும் மற்ற படையினரும் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக டாக்டர் இங் நேற்று கூறினார்.
அவர்கள் நடைமுறைகளைச் சீரமைத்து, மின்னியல் தீர்வுகளை அறிமுகப்படுத்தினார்கள். கொவிட்-19 கிருமி தொற்றிய வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்த குடியிருப்பாளர்களுக்குச் சரியான பராமரிப்பு கிடைப்பதை அவர்கள் உறுதிசெய்தார்கள்.
திட்டம் இப்போது சீராக நடந்துகொண்டிருப்பதால், சுகாதார அமைச்சிடம் இதைத் திரும்ப ஒப் படைக்க இது நல்ல நேரம் என்று டாக்டர் இங் குறிப்பிட்டார்.
வீட்டில் இருந்தபடி குணமடையும் திட்டத்தில் சுமூகமாய் இருப்பதை உறுதிசெய்ய, சிங்கப்பூர் ஆயுதப் படைகளைச் சேர்ந்த ஆலோசகர்கள் தொடர்ந்து அத்திட்டத்தில் பணியாற்றுவார்கள் என்றும் டாக்டர் இங் கூறினார்.
வீட்டில் இருந்தபடி குணமடையும் முன்னோடித் திட்டம் சென்ற ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கப்பட்டது. ஆனால் தங்கள் சூழ் நிலைக்குத் தகுந்த சரியான ஆலோசனையைப் பெற தங்களால் சுகாதார அமைச்சைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை என்று பொதுமக்களில் பலர் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, திட்டத்துக்கு உதவ சிங்கப்பூர் ஆயுதப் படைகள் வீட்டில் குணமடையும் திட்டத்துக்கான பணிக்குழுவை அமைத்தது.
சிங்கப்பூர் ராணுவம், சிங்கப்பூர் கடற்படை, சிங்கப்பூர் ஆகாயப்படை ஆகியவற்றைச் சேர்ந்த 450க்கும் அதிகமானவர்கள் திட்டத்தில் பங்கெடுத்ததாக தற்காப்பு அமைச்சர் தெரிவித்தார்.