மலேசியாவில் பெய்துவவரும் பருவமழையால் சிங்கப்பூரில் காய்கறி விலை உயர்ந்துவிட்டது. சில வாரங்களுக்கு முன்பிருந்ததைப்போல அவை கிட்டத்தட்ட இருமடங்கு விலைக்கு விற்கப்படுகின்றன.
இந்த விலையேற்றம் எதிர்பார்க்கப்பட்டதுதான் என்று உள்ளூர் காய்கறி வணிகர்கள் கூறினர்.
வெள்ளரிக்காய், பாகற்காய் போன்றவற்றின் விலை ஐந்து முதல் 15% கூடிவிட்டதாகவும் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மற்ற காய்கறிகளின் விலை கிட்டத்தட்ட நிலையாக இருப்பதாகவும் ஃபேர்பிரைஸ் பேரங்காடியின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
சாதகமில்லாக் காலநிலையின் காரணமாக பலவகை காய்கறிகளின் விலை கூடிவிட்டதாக கோல்ட் ஸ்டோரேஜ், ஜயன்ட் பேரங்காடிகளை நடத்திவரும் ‘டிஎஃப்ஐ ரீட்டெயில்’ குழுமம் தெரிவித்தது.
சிங்கப்பூருக்கு ஆகப் பெரிய அளவில் காய்கறிகளை விநியோகம் செய்வது மலேசியாதான். கடந்த ஆண்டில் 582,000 டன் காய்கறிகளைச் சிங்கப்பூர் இறக்குமதி செய்தது. அதில் மலேசியாவின் பங்கு 42%.
கடந்த செப்டம்பர் 24ஆம் தேதியில் இருந்து இடி, மின்னலுடன் கூடிய கனமழையை மலேசியா எதிர்கொண்டு வருவதாக அந்நாட்டின் வானிலை ஆய்வுத் துறைத் தகவல்கள் கூறுகின்றன.