சிங்கப்பூரில் அடுத்த சில மாதங்களுக்குக் கூடுதல் மழை பெய்யலாம்.
தென்கிழக்காசியாவில் ‘லா நினா’ எனும் பருவநிலை மாற்ற நிகழ்வே இதற்குக் காரணம்.
‘லா நினா’ நிகழ்வு தற்போது இடம்பெற்றுள்ளதாக சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம், தேசிய சுற்றுப்புற வாரியம் உள்ளிட்ட பல அமைப்புகள் தெரிவித்துள்ளன.
“அடுத்த ஆண்டு தொடக்கம் வரை ‘லா நினா’ நிகழ்வு நீடிக்கும் என்று முன்னுரைக்கப்படுகிறது,” என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் அதன் இணையப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாண்டின் ‘லா நினா’ நிகழ்வு, கடந்த ஈராண்டுகளில் ஏற்பட்டுள்ள இரண்டாவது வானிலை நிகழ்வாகும்.
கடந்த ஆண்டு மூன்றாம் காலாண்டிலும் இந்த வட்டாரத்தில் ‘லா நினா’ நிகழ்வு கண்டறியப்பட்டது. இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் அந்த நிகழ்வு தணிந்தது.
ஜூன், அக்டோபர் மாதங்களுக்கு இடையிலேயே பொதுவாக ‘லா நினா’ நிகழ்வு பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் கூறியது.