புதன்கிழமை சிங்கப்பூரில் 2,079 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. செவ்வாய்க்கிழமை பதிவான 1,782ஐ காட்டிலும் இது அதிகம்.
இருப்பினும் வாராந்திர கொவிட்-19 தொற்று பரவல் விகிதம் 0.83லிருந்து 0.75க்கு இறங்கியதாக சுகாதார அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.
சிங்கப்பூரில் தற்போதைய தொற்று பரவல் விகிதம் இரண்டு மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைவாகப் பதிவாகி உள்ளது.
ஆகக் கடைசியாக செப்டம்பர் 24ஆம் தேதி இந்த விகிதம் 1.63ஆக இருந்தது. ஒரு வாரத்தில் சமூக அளவில் பரவும் தொற்றுக்கள் எண்ணிக்கை அதற்கு முந்திய வார எண்ணிக்கையுடன் ஒப்பிட்டு பரவல் விகிதம் கணக்கிடப்படுகிறது. இந்த விகிதம் 1க்குக் குறைவாக இருப்பின் புதிதாகப் பதிவாகும் கொவிட்-19 தொற்று எண்ணிக்கைக் குறைந்து வருவதாகப் பொருள்.
புதன்கிழமை நிலவரப்படி, இங்குள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள மொத்த படுக்கைகளில் 56.1 விழுக்காடு பயன்பாட்டில் உள்ளது. இந்த விகிதம் செவ்வாய்க்கிழமை 55.2 விழுக்காடாக இருந்தது. மேலும், கொவிட்-19 தொற்றுடன் தொடர்புடைய பாதிப்புகளால் ஆறு பேர் புதன்கிழமை உயிரிழந்ததாகவும் அவர்கள் 60 வயதுக்கும் 83 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் இவர்களில் ஒருவர் மட்டும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த ஆறு பேரையும் சேர்த்து இங்கு இதுவரை கொவிட்-19 தொற்றுடன் தொடர்புடைய பாதிப்புகளால் 678 பேர் உயிரிழந்துவிட்டனர்.
புதன்கிழமை அறிவிக்கப்பட்ட மொத்த தொற்று எண்ணிக்கையில் 2,030 மட்டும் சமூகத்தில் பதிவானவை. வெளிநாட்டு ஊழியர் தங்கு விடுதிகளில் 40 பேருக்கும் வெளிநாடுகளில் இருந்து வந்த ஒன்பது பேருக்கும் அன்றைய தினம் தொற்று உறுதி செய்யப்பட்டது. சிங்கப்பூரில் இதுவரை பதிவான கொவிட்-19 தொற்று எண்ணிக்கை 257,510.