மளிகைக் கடைகளுக்கு உதவும் வகையில் அவை விற்கும் பொருட்கள் வாடிக்கையாளர்களைச் சென்றடைய 11 தானியங்கி மின்னிலக்கக் கூடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த மின்னிலக்கக் கூடங்கள் புக்கிட் கொம்பாக், கிளமெண்டி ஆகிய வட்டாரங்களில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடி
யிருப்புக் கட்டடங்களில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த அறிமுகத் திட்டம் ஓராண்டுக்கு நடத்தப்படும். இத்திட்டத்தை என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு, வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், சிங்கப்பூர் வர்த்தகர்கள் சங்க சம்மேளனம் ஆகியவை நேற்று தொடங்கிவைத்தன.
குடியிருப்புப் பேட்டைகளை மின்னிலக்கமயமாக்கும், மீண்டும் உயிர்ப்பிக்கும் குழு மேற்கொண்டு வரும் முயற்சிகளில் இந்த அறிமுகம் திட்டமும் ஒன்று.
அறிமுகத் திட்டத்தில் சேர்ந்த மளிகைக் கடைகளில் புக்கிட் கொம்பாக் வட்டாரத்தில் உள்ள குவான் மீட் என்டர்பிரைஸ் மளிகைக்கடையும் ஒன்று.
புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 5 புளோக் 390ல் மூன்று மின்னிலக்கக் கூடங்களிலும் புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 5 புளோக் 384ல் உள்ள நான்கு மின்னிலக்கக் கூடங்களிலும் தனது மளிகைப் பொருட்களை அது அடுக்கி வைத்துள்ளது.
கிளமெண்டி அவென்யூ 4 புளோக் 312ஏ குடியிருப்புக் கட்டடத்தில் கீ குவான் ஹுவாட் பேரங்காடி அடுக்கி வைத்திருக்கும்
மளிகைப் பொருட்களைக் கொண்ட நான்கு மின்னிலக்கக் கூடங்கள் உள்ளன.
மின்னிலக்கக் கூடங்கள் அனைத்தும் குடியிருப்புக் கட்டடங்களில் தரைத்தளத்தில் வைக்கப்பட்டுள்ளன. அவை 24 மணி நேரம் இயங்கும். சில மின்னிலக்கப் பெட்டிகள் குளிர்பதன வசதியைக் கொண்டவை.
அன்றாடப் பயன்பாட்டுக்குத் தேவையான பொருட்களை அவற்றில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. சமையலுக்குத் தேவையான பொருட்கள், சலவைக்குப் பயன்
படுத்தப்படும் சவர்க்காரம் போன்றவை மின்னிலக்கக் கூடங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
மின்னிலக்கக் கூடங்களில் உள்ள பொருட்களை வாங்க விரும்புவோர் முதலில் பதிவு
செய்துகொள்ள வேண்டும்.
கடன் அட்டையைப் பயன்படுத்தி அவர்கள் பொருட்களை வாங்கலாம். பொருட்களை வாங்க விரும்புவோர் கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும். கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து மின்னிலக்கக் கூடங்களைத் திறக்கலாம்.
மின்னிலக்கக் கூடங்களிலிருந்து வெளியே எடுக்கப்படும் பொருட்களை செயற்கை நுண்ணறிவு கேமரா தொழில்நுட்பம் கண்காணிக்கும்.
பொருட்களை எடுத்துவிட்டு மின்னிலக்கக் கூடங்களின் கதவை மூடி பூட்டியதும் அவற்றின் விலை கடன் அட்டைக் கணக்கில்
பதிவாகிவிடும்.
குடியிருப்புப் பேட்டைகளை மின்னிலக்கமயமாக்குதல், மீண்டும் உயிர்ப்பிக்கும் குழுவுக்குத் தலைமை தாங்கும் வர்த்தக, தொழில் துணை அமைச்சர் லோ யென் லிங்கும் தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் சிம் ஆன்னும் திட்டத்தின் அறிமுக விழாவில் நேற்று கலந்துகொண்டனர்.
மின்னிலக்க அணுகுமுறையை விரிவுபடுத்த விழையும் குடியிருப்புப் பேட்டை வர்த்தகர்களுக்கு இக்குழு ஆதரவுக்கரம் நீட்டுகிறது.
"மின்னிலக்கமயமாதல் என்று சொல்லும்போது அதை வெறும் மின்வர்த்தகம் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் இத்தகைய புத்தாக்கமிக்க புதிய திட்டங்கள் மூலமாகவும் மின்னிலக்க
அணுகுமுறைக்கு மாறலாம். அதே சமயத்தில் பயனீட்டாளர்களின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப வர்த்தகம் செய்யலாம்.
"வயதாகுகிறது என்றும்
முன்புபோல நாளுக்கு 12 மணி நேரம் வர்த்தகம் செய்ய முடியவில்லை என்று பெரும்பாலான மளிகைக்கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
"இதனால் தங்களுக்குக் கிடைக்கும் வருமானம் குறையக்கூடும் என்றும் வாடிக்கையாளர்களை அவர்கள் இழக்கக்கூடும் என்றும் அவர்களில் பலர் கவலைப்
படுகின்றனர்.
"வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்புப் பேட்டைகளில் உள்ள கடைகள் அவற்றின் வாடிக்கையாளர்களைச் சென்றடையவும் வர்த்தக வாய்ப்பை அதிகரிக்கவும் தற்போது இயங்கிவரும் மளிகைக்
கடைகளுக்கு ஈடான ஓர் ஏற்பாட்டையும் செய்து தர இந்த மின்னிலக்கக் கூடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன," என்று திருவாட்டி லோ தெரிவித்தார்.