ஹவ்காங் வட்டாரத்தில் உள்ள வீடு ஒன்றில் நேற்று முன்தினம் தீச்சம்பவம் ஏற்பட்டதை அடுத்து, புகையை சுவாசித்த ஐவருக்கு முச்சுத்திணறல் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
நேற்று முன்தினம் மாலை 5.45 மணி அளவில் ஹவ்காங் ஸ்திரீட் 52 புளோக் 537ல் இரண்டாவது மாடியில் உள்ள ஒரு வீடு தீப்பிடித்து எரிந்ததாக தகவல் கிடைத்தது என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. வீட்டில் சமையலறை
தீப்பிடித்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் நிகழ்ந்த இடத்தை அதிகாரிகள் அடைந்தபோது வீடு தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது. சுவாச உதவிக் கருவிகளை அணிந்துகொண்டு அதிகாரிகள் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்த அந்த வீட்டிற்குள் சென்று தீயை அணைத்தனர்.
குடிமைத் தற்காப்பு அதிகாரிகள் சம்பவ இடத்தை அடைவதற்கு முன்பு பாதிக்கப்பட்ட வீட்டின் மேல் மாடிகளில் உள்ள வீடுகளில் வசிக்கும் ஏறத்தாழ 20 குடியிருப்பாளர்கள் அங்கிருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
"குடியிருப்பாளர்கள் படிக்கட்டுகள் வாயிலாக வெளியேற்றப்பட்டனர். தீப்பற்றி எரிந்துகொண்டிருந்த வீட்டிற்கு அருகில் இருந்தபோது புகை காரணமாக ஐவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது," என்று குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
பாதிக்கப்பட்ட ஐவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கும் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.
வீட்டில் தீ மூண்டதற்கான காரணத்தைக் கண்டறிய குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.