வரும் டிசம்பர் ஏழாம் தேதியிலிருந்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் மின்னிலக்க கொவிட் சான்றிதழ் முறையுடன் பொருந்திச்செல்லும் கொவிட்-19 சுகாதார சான்றிதழ்களை சிங்கப்பூர் வழங்கும். இது ஐரோப்பாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான பயணங்களை இன்னும் எளிதாக்கும்.
மேலும், சிங்கப்பூர் வழங்கும் இந்த புதுவகைச் சான்றிதழ்கள் உள்ளவர்களுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கான நடவடிக்கைகள் பொருந்தும். போக்குவரத்து அமைச்சர் திரு எஸ் ஈஸ்வரன் நேற்று இத்தகவலைத் தெரிவித்தார்.
வரும் டிசம்பர் ஏழாம் தேதியிலிருந்து 'ஈயூ டிசிசி' (EU DCC) முறையில் வழங்கப்படும் கொவிட்-19 சான்றிதழ்களை, தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கு சான்றாக சிங்கப்பூர் ஏற்றுக்கொள்ளும். 'ஈயூ டிசிசி' முறையில் இருக்கும் சான்றிதழ்களை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அல்லது தடுப்பூசிப் பயணத் தட ஏற்பாடு இல்லாத நாடுகள் வழங்கியிருக்கலாம். அவ்வாறு இருப்பினும், அவற்றைக் கொண்டு தடுப்பூசிப் பயணத் தட ஏற்பாடு உள்ள நாடுகளிலிருந்து இங்கு வரலாம்.
ஆனால் அண்மைய பயண விவரம், பரிசோதனைகள் போன்ற இத்தகைய பயணிகள் தடுப்பூசிப் பயணத் தட ஏற்பாட்டில் உள்ள மற்ற நிபந்தனைகளை நிறைவுசெய்யவேண்டும்.
இம்மாதம் 25ஆம் நிலவரப்படி ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள எல்லா 27 நாடுகளும் 'ஈயூ டிசிசி' முறையில் கொவிட்-19 சுகாதாரச் சான்றிதழ்களை வழங்குகின்றன. ஒன்றியத்தில் இல்லாத மேலும் 24 நாடுகளும் இந்த முறையைப் பின்பற்றுகின்றன. அவற்றில் நியூசிலாந்து, இஸ்ரேல், துருக்கி, பிரிட்டன் உள்ளிட்டவையும் அடங்கும்.
சிங்கப்பூரின் 'ஹெல்த்செர்ட்ஸ்' சான்றிதழ்களை ஐரோப்பிய ஒன்றியம் கடந்த 24ஆம் தேதி அங்கீகரிக்க முடிவு செய்தது. இதை அடுத்து 'ஈயூ டிசிசி' முறைக்கு ஏதுவான சான்றிதழ்களை வழங்கும் முடிவு எடுக்கப்பட்டது.