தென்னாப்பிரிக்காவில் பெரிதும் உருமாறிய புதிய கொவிட்-19 கிருமி வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மிகவேகமாகப் பரவக்கூடிய இக்கிருமிய பற்றி கவலை எழுந்துள்ளது.
தென்னாப்பிரிக்காவின் ஒன்பது மாநிலங்களில் இந்தக் கிருமி வகை வேகமாகப் பரவியுள்ளதாக நம்பப் படுகிறது. அந்நாட்டில் பி11529 கிருமி வகை 22 பேருக்குத் தொற்றியுள்ளதாக நேற்றுமுன்தினம் அரசாங்கம் உறுதிப்படுத்தியது. இன்னும் பலருக்கு நோய் பரவியிருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது.
போட்ஸ்வானா, ஹாங்காங் உள்ளிட்ட இடங்களில் புதிய கிருமி வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கிருமி வகை கவலை அளிப்பது ஏன்?
தடுப்பூசிகள் இக்கிருமி வகைக்கு எதிராக வலுவாகச் செயல்படாமல் போகலாம். புதிதாகத் தோன்றிய இந்த பி11529 கிருமி வகை பல முறை உருமாறியிருப்பதே இதற்குக் காரணம்.
கொவிட்-19 கிருமியில் உள்ள முட்கள் கொண்ட புரதங்கள் மனித அணுக்களைப் பிடித்துக்கொண்டு பெருகுகின்றன. ஆனால் பி11529 கிருமி வகையில் உள்ள புரதங்கள் பலமுறை உருமாறியுள்ளதால் அவை உடலில் நச்சுப்பொருள் என்பதை அடையாளம் கண்டு அழிக்கும் தன்மை தடுப்பூசிகளுக்கு இல்லாமல் போகலாம். அதனால் தடுப்பூசிகளின் ஆற்றல் குறையக்கூடும்.
அத்துடன் இந்த வகைக் கிருமி மிகவும் வேகமாகப் பரவி வருவதாகத் தெரிகிறது. இரண்டு வாரத்திற்குள் பி11529 வகை தென்னாப்பிரிக்காவில் அதிகம் பரவி வரும் கிருமியாக மாறியுள்ளதாக அந்நாட்டு ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.