தமிழ் முரசின் நவம்பர் 24ஆம் தேதி பதிப்பில், நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் கொள்கை ஆய்வுக் கழகம், எஸ் ராஜரத்னம் அனைத்துலகக் கல்விக் கழகம் ஏற்பாடு செய்திருந்த பாலின அடையாளம் தொடர்பான கருத்தரங்கில் பேசியது தொடர்பான செய்தி வெளியானது.
முன்னாள் தூதுவரான திரு ஓங் கெங் யோங் நெறியாளராக பங்கு பெற்ற அக்கருத்தரங்கில் ஒரு பாலின, இரு பாலின, திருநங்கையர் பிரிவினர் (எல்ஜிபிடிகியூ) குறித்த அரசாங்கத்தின் அணுகு முறை பற்றியும் திரு வோங் பேசினார்.
அதில் பங்கேற்ற பொதுமக்களில் சிலர், இதுபோன்ற சில பிரிவினருக்குப் பிடிமானம் இல்லை என்றும் இப்பிரிவினரால் மற்றவர் களுடன் ஈடுகொடுத்து சமநிலையில் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் கூறினர்.
இக்கருத்துகள் நிலவுவதை ஏற்றுக்கொண்ட திரு வோங், சிலருக்கு பாலின எண்ணம் குறித்தும் அடையாளம் குறித்தும் ஆழமான கருத்துகள் உண்டு என்றும் இது உலகளாவிய போக்கு என்றும் கூறினார்.
"ஆனால், ஒரு பாலின, இரு பாலின, திருநங்கையர் பிரிவினருக்கு நான் சொல்லக்கூடியது என்னவென்றால், மனப்போக்குகள் நிலையாக இருந்துவிடுவதில்லை, அவை மாறி வருகின்றன," என்று கூறியவர், அரசாங்கம், இப்பிரிவினர், சமயக்குழுக்கள் உள்ளிட்ட மக்க ளுடன் இது குறித்து அடிக்கடி தொடர்புகொள்வதாகக் கூறினார்.
"இது குறித்த உணர்வும் மனப்போக்கும் மாறி வருவது தெள்ளத் தெளிவாக தெரிகிறது, குறிப்பாக இளையரிடமும் அதே சமயம் சமுதாயம் முழுவதிலும்."
இது தொடர்பான கருத்துப் பரிமாற்றம் வீணான ஒன்றல்ல என்பது இதிலிருந்து தெரிகிறது என்ற திரு வோங், "இதன் அம்சங்கள் காலம் முழுவதும் இதேபோல் நிலைபெற்று விடும் என்பதில்லை," என்றும் கூறினார்.
"இந்த மனப்போக்குகள், உணர்வுகள் மாறிவரும் நிலையில், எந்த மாதிரியான சமநிலை உகந்ததாக இருக்கும் என்பதுபற்றி சமுதாயம் சிந்திக்க வேண்டும். அத்துடன், அரசாங்கமும் எந்த மாதிரியான சமநிலை சமுதாயத்துக்குப் பொருத்தமாக இருக்கும் என்றும் இதன் தொடர்பிலான கொள்கைகளை எப்படி சரிசெய்வது என்றும் பரிசீலிக்க வேண்டியிருக்கும்," என்று திரு வோங் கூறினார்.