பாலர்களுக்கு உதவும் 'பிசிஎஃப்'
மக்கள் செயல் கட்சியின் சமூக அறநிறுவனம் நடத்தும் (பிசிஎஃப்) ஸ்பார்க்கல்டாட்ஸ் பாலர் பள்ளிகளில் பயிலும் பிள்ளைகளுக்கான இணையக் கற்றல் தளம் வரும் 2023இல் செயல்படும். வீட்டிலிருந்தே இணையம் வழி படிக்க உதவும் இந்தத் தளம், பிள்ளைகளின் படிப்பில் உதவ பெற்றோருக்குக் கைகொடுக்கும்.
பிள்ளைகளின் படிப்பில் பெற்றோரை ஈடுபடுத்துவதையும் பாலர் ஆரம்ப கால மேம்பாடுகள், கல்வி பற்றிய அறிவைப் பகிர்ந்து கொள்வதற்கும் பிசிஎஃப் மேற்கொண்டுள்ள முயற்சியின் ஓர் அம்சம் இத்தளம். பாலர்களின் வயதுக்கு ஏற்ற கற்றல் வளங்களைக் கொண்டிருக்கும் இத்தளம், மெய்நிகர் வகுப்புகளையும் வழங்கும்.
மேலும், வரும் ஜனவரி முதல், ஆரம்ப கால பாலர் துறை நிபுணர்கள், குழந்தைகளுக்கு வீட்டில் சிறந்த ஆதரவை வழங்குவதற்காக உத்திகள், திறன்களைப் பகிர்ந்து கொள்ளும் பயிலரங்குகளில் பெற்றோர் கலந்துகொள்ளலாம்.
கிட்டத்தட்ட 360 பாலர் பள்ளிகள், 40,000க்கும் மேற்பட்ட மாணவர்களையும் கொண்ட பிசிஎஃப், நேற்று தனது முதல் பெற்றோர் மாநாட்டை நடத்தியது.
கிருமிப் பரிசோதனை செய்யாது பச்சை குத்த சென்றவர் மீது குற்றச்சாட்டு
சுவாசக் குழாயில் கிருமித்தொற்று ஏற்பட்டதாக உறுதி செய்யப்பட்ட ஆடவர் ஒருவர், கொவிட்-19 கிருமிப் பரிசோதனையைச் செய்யாமல் வீடு திரும்பினார்.
மறுநாள் வீட்டில் இருப்பதற்குப் பதிலாக தனியார் வாகனத்தில் சின் மிங் ரோட்டிலுள்ள பச்சைக்குத்தும் கடைக்குச் சென்றுள்ளார். அங்கு தமது நெஞ்சில் பச்சை குத்துவதற்கு ஏற்பாடு செய்தார்.
மருத்துவ விடுப்புச் சான்றிதழைப் பெற்ற சுமார் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, செப்டம்பர் 19ஆம் தேதியன்றுதான் அவர் பிசிஆர் பரிசோதனையைச் செய்தார்.
கொவிட்-19 கிருமிப்பரவல் தொடர்புடைய மருத்துவமனைச் சான்றிதழைப் பெற்றபோது அவர் வீட்டில் இருக்காமல் வெளியே சென்றதாக குற்றம் சாட்டப்பட்டார்.
புதிதாக 1,275 பேருக்குத் தொற்று
சிங்கப்பூரில் நேற்று முன்தினம் புதிதாக 1,275 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. சுகாதார அமைச்சு இதைத் தெரிவித்தது. ஒப்புநோக்க, சென்ற புதன்கிழமை 2,709 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது.
சென்ற புதன்கிழமை 0.75ஆக இருந்த வாராந்திர கிருமித்தொற்று உயர்வு விகிதம் நேற்று முன்தினம் 0.72ஆக குறைந்தது.
மேலும் வியாழக்கிழமை நிலவரப்படி தீவிர சிகிச்சைப் பிரிவில் 56.8% படுக்கைகள் நிரப்பப்பட்டன. புதன்கிழமை காணபபட்ட 56.1 விழுக்காட்டைவிட இது சற்று அதிகம்.
இதற்கிடையே, கிருமித்தொற்று தொடர்பான உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக மூவர் உயிரிழந்ததாகவும் சுகாதார அமைச்சு நேற்று முன்தினம் தெரிவித்தது. இவர்கள் 69 வயதுக்கும் 74 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
இன்றைய கவிமாலை சந்திப்பில் தமிழகக் கவிஞர் லிபி ஆரன்யா
கவிதை குறித்த மாதாந்திர சந்திப்புகளைத் தொடர்ந்து நடத்திவரும் கவிமாலை அமைப்பின் இம்மாதச் சந்திப்பு இன்று 27ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
இச்சந்திப்பில் தமிழகத்தைச் சேர்ந்த கவிஞர் லிபி ஆரண்யா கலந்துகொள்வார். அவர் 'பெரு வெடிப்பும் விரி கவிதையும்' என்ற தலைப்பில் காலந்தோறும் பாடுபொருள் விரிந்துகொண்டிருக்கும் கவிதைகளின் தன்மையையும் அதன் பின்னணி பற்றியும் சிறப்புரையாற்றவுள்ளார். அவருடன் கலந்துரையாடல் அங்கமும் உண்டு.
சிங்கப்பூர் கவிஞர் இளங்கோவனின் மௌனவதம் கவிதை நூலைப் பற்றி கவிஞர் இன்பா பகிர்ந்துகொள்வார்.
இணையம் வழி நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். ஸூம் சந்திப்பு எண்: 238 635 9660 (கடவு எண் இல்லை)
தனிமைகாலம் முடிந்த சிங்கங்கள்
சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் காணப்படும் ஆப்பிரிக்க சிங்கக் காட்சி இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு அங்கு மொத்தம் ஐந்து சிங்கங்களுக்கு கொவிட்-19 கிருமித் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அங்குள்ள 14 சிங்கங்களும் தனிமைப்படுத்தப்பட்டன.
அவற்றில் ஐந்து சிங்கங்கள் ஆசியாவையும் ஒன்பது சிங்கங்கள் ஆப்பிரிக்காவையும் சேர்ந்தவை. அங்குள்ள ஆப்பிரிக்க சிங்கங்களிடையே கொவிட்-19 கிருமித்தொற்றுக்கான அறிகுறிகள் தற்போது தென்படாததால் அவற்றின் மீதான தனிமை உத்தரவு அகற்றப்பட்டதாக மண்டாய் வனவிலங்குக் குழுமத்தின் பேச்சாளர் நேற்று தெரிவித்தார்.
நான்கு ஆசிய சிங்கங்களுக்கும் ஒரு ஆப்பிரிக்க சிங்கத்திற்கும் கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டதாக இம்மாதம் 9, 10ஆம் தேதிகளில் தெரிவிக்கப்பட்டது.