தெம்பனிஸ்வாசிகள் மருத்துவரின் பரிந்துரைக்கேற்ற வாழ்க்கைப்பாணிக்கு மாற உதவி
உடல்நலத்திற்கு ஏற்ற வாழ்க்கைப் பாணி மாற்றங்களை கடைப்பிடிக்க உதவும் நோக்கத்தில் தெம்பனிஸ் மக்களுக்குப் புதிய செயல்திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.
தேவைக்கேற்ப வடிவமைக்கப்பட்டு இருக்கும் அந்தத் திட்டத்தின் மூலம், 40க்கும் அதிக வயதுள்ள சிங்கப்பூர் குடிமக்களும் நிரந்தரவாசிகளும் இலவசமாகப் பயனடையலாம். தொடக்கமாக 250 பேரை உள்ளடக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
'அவர் தெம்பனிஸ் ஹப்' வளா கத்தில் சுகாதார மூத்த துணை அமைச்சர் கோ போ கூன் அந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
ஒருவரை பரிசோதித்த மருத்துவர், அவரின் உடலில் ஏற்பட்டு இருக்கும் நோய்களை அல்லது குறைபாடுகளை எப்படி தவிர்த்துக்கொள்ளலாம் என்பது பற்றி தெரிவிக்கும் ஆலோசனைகளை, பரிந்துரைகளை முற்றிலும் பின்பற்ற முடியாத சூழ்நிலை நோயாளிக்கு இருக்கக்கூடும்.
அத்தகைய தெம்பனிஸ்வாசிகள் தங்கள் உடல்நலனுக்கு அவசிய மான வாழ்க்கைப் பாணிகளைப் பின்பற்றுவதற்கு இப்போது வழி ஏற்பட்டுள்ளது.
அவர்கள் இந்த ஆறுவார கால செயல்திட்டத்தில் சேர்ந்துகொண்டு பலன் அடையலாம்.
உடல்நல ஒருங்கிணைப்பாளர் ஒருவர், காலக்கிரம முறைப்படி தெம்பனிஸ் குடியிருப்பாளர்களை அணுகி அவர்களுக்கு இதன் தொடர்பில் வழிகாட்டி உதவுவார்.
இந்தத் திட்டம் 'மேம்படும் உடல்நலம்' என்று குறிப்பிடப்படும்.
சிங்ஹெல்த் பலதுறை மருந்தகம் தலைமையில் இப்புதிய செயல்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
சிங்ஹெல்த் நிறுவனத்தின் ஊழியர் ஒவ்வொரு குடியிருப்பாளரையும் எட்டி அவர்கள் உடல்நலத்திற்கு ஏற்ற, மருத்துவர் பரிந்துரைத்த வாழ்க்கைப் பாணியைக் கடைப்பிடிக்க உதவும் பராமரிப்புத் திட்டம் ஒன்றை உருவாக்க உதவுவார்.
மெய்நிகர் பயிலரங்குகள், சான்றிதழ் பெற்ற பயிற்றுவிப்பாளர் நடத்தும் பயிற்சி வகுப்புகள் போன்றவை மூலம் மக்களுக்கு உதவி கிடைக்கும். இதன் வழி அவர்கள் சொந்த உடற்பயிற்சி ஏற்பாடுகளைச் செய்துகொள்ளலாம்.
உடல்நலத்துக்கு உகந்த வாழ்க்கைப்பாணியைப் பின்பற்றலாம். சிங்ஹெல்த் பலதுறை மருந்தகங்களின் இணையத்தளம் மூலம் குடியிருப்பாளர்கள் இத்திட்டத்திற்குப் பதிந்துகொள்ளலாம்.