சிங்கப்பூரில் மின்-சிகரெட்டுகளின் பயனீடும் விற்பனையும் 2018 பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தடை செய்யப்பட்டன. இருந்தாலும்கூட அத்தகைய சாதனங்களைப் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை கொஞ்சம் கூடி இருக்கிறது.
'மிலியூ' என்ற நிறுவனம் இணையம் மூலம் செப்டம்பர் மாதம் நடத்திய ஆய்வில் இந்த நிலவரம் தெரியவந்துள்ளது.
ஆய்வில் கலந்துகொண்ட 5,900 பேருக்கும் அதிகமானவர்களில் 3.9 விழுக்காட்டினர் இப்போது மின்-சிகரெட்டுகளை அல்லது குறைவெப்பநிலையில் ஆவியாகும் மின்-சிகரெட்டைப் பயன்படுத்துகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. ஆய்வில் கலந்துகொண்டவர்களுக்கு வயது 21 முதல் 69 வரை. இதேபோல ஓர் ஆய்வு இந்த ஆண்டு தொடக்கத்தில் நடத்தப்பட்டது. அத்தகைய கருவிகளைப் பயன்படுத்துவோரின் அளவு அப்போது 3% ஆக இருந்தது.
மின்-சிகரெட்டுகளில் பயன்படுத்தப்படும் நிக்கோட்டின் ஒருவரை அடிமையாக்கிவிடும்.
அதில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய பொருட்களும் கலந்து இருக்கின்றன என்பது healthhub.sg என்ற இணையத்தளம் மூலம் தெரியவருகிறது.
மின்-சிகரெட்டுகளை வைத்திருப்பது, பயன்படுத்துவது, வாங்குவது குற்றம். அதற்கு அதிகபட்சமாக $2,000 அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது.
என்றாலும்கூட அந்தச் சாதனங்களை மக்கள் சட்டவிரோதமாகப் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
சிங்கப்பூரில் சட்டவிரோத மின்-சிகரெட்டுகள் அதிகமாக கிடைப்பதே இதற்கு காரணமாக இருக்கலாம் என்று சிங்கப்பூர் புகையிலைச் சங்கம் தெரிவிக்கிறது.
சட்டவிரோத மின்-சிகரெட்டு களை வைத்திருந்ததற்காக 2018 பிப்ரவரி முதல் 2021 ஜூன் வர பிடிபட்டவர்களின் எண்ணிக்கை ஏறுமுகமாக இருக்கிறது என்று சுகாதார அமைச்சும் சுகாதார அறிவியல் ஆணையமும் வெளியிட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் போக்கு கவலை தருகிறது என்று மிலியூ நிறுவனத்தை அமைத்த ஜெரார்டு ஆங் கூறினார்.
ஆய்வில் கருத்து கூறியவர்களில் 66 விழுக்காட்டினர் தாங்கள் சிகரெட் புகைப்பதைக் குறைத்துக் கொள்ளவே மின்-சிகரெட்டைப் பயன்படுத்துவதாகக் கூறினர்.
இதனிடையே, சிங்கப்பூரில் 2017ல் 11.8 விழுக்காடாக இருந்த அன்றாட புகைப்போர் விகிதம் 2020ல் 10.1 விழுக்காடாக குறைந்து இருக்கிறது என்று சுகாதார அமைச்சின் தேசிய மக்கள் தொகை சுகா தார ஆய்வு 2019-2020 அறிக்கை தெரிவித்துள்ளது.