கொவிட்-19 கிருமித்தொற்றைச் சிங்கப்பூர் கையாளும் முறையில் சிங்கப்பூரர்களுக்கும் மக்கள் செயல் கட்சி அரசாங்கத்திற்கும் பொதுமக்களுக்கும் இடைப்பட்ட நம்பிக்கை, மற்ற நாடுகளின் நடைமுறையில் இருந்து தீர்க்கமாக வேறுபட்ட அணுகுமுறையாக இருக்கிறது என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்தார்.
கொவிட்-19 உலகம் முழுவதுமே சமூகங்களைப் பொறுத்தவரை, பொது நம்பிக்கையைச் சோதிக்கும் ஒன்றாக ஆகி இருக்கிறது என்று மக்கள் செயல்கட்சி மாநாட்டில் ஆற்றிய உரையில் திரு லீ குறிப்பிட்டார். அமெரிக்கா, ஐரோப்பாவைவிட சிறந்த மருத்துவர்களோ, விஞ்ஞானிகளோ, சுகாதாரப் பராமரிப்பு முறையோ சிங்கப்பூரில் இருப்பதாகக் கூற முடியாது.
இருந்தாலும் நாம் ஒருவர் மற்றொருவரை நம்புகிறோம். ஆகையால் ஒருவர் மற்றொருவரை எதிர்த்து செயல்படாமல் ஒருவர் மற்றொருவருடன் சேர்ந்து செயல்படுகிறோம். இதுவே நம்முடைய தீர்க்கமான, திட்டவட்டமான வேறுபட்ட அணுகுமுறையாக இருக்கிறது என்று திரு லீ குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் அதிக நம்பிக்கைமிக்க சமூகமாக இருக்கிறது. எப்போதுமே அது இப்படியே இருந்து வரவேண்டும் என்று சன்டெக் சிங்கப்பூர் மாநாடு மற்றும் கண்காட்சி நிலையத்தில் கட்சி உறுப்பினர்கள், தொண்டர்களிடையே நேற்று உரையாற்றிய திரு லீ தெரிவித்தார்.
“நாம் எப்போதுமே ஒருவர் மற்றொருவரிடம் நம்பிக்கையோடு இருந்து வரவேண்டும்.
“கொவிட்-19 தொற்றை மட்டுமன்றி எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எல்லா புயல்களையும் சமாளிப்பதற்கு இது அவசியம்,” என்று திரு லீ கூறினார்.
பிணைப்புமிக்க சமூகத்தை உருவாக்கி பலப்படுத்துவதற்குப் பல காலம் பிடிக்கும் என்று தெரிவித்த திரு லீ, அதை எந்தவொரு நெருக்கடிக்கும் முன்பாகவே சாதிக்க வேண்டும் என்றார்.
மக்களின் நம்பிக்கையைக் கொண்டிருப்பது மசெக அரசாங்கத்தின் பெரும் பேறு என்றும் அவர் கூறினார். இதன் காரணமாக சரியான காரியத்தைச் செய்ய முற்படும் போதும் அரசியல் தலைவர்கள் தொடர்ந்து மக்களின் நம்பிக்கையைப் பேணி வளர்க்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
கொவிட்-19க்கு எதிராக சிங்கப்பூர் எடுத்துவரும் நடவடிக்கைகள் பலனளிப்பதற்கு மசெக அரசாங்கத்தை மக்கள் நம்புவது ஒரு முக்கிய காரணம் என்று தனது உரையில் திரு லீ குறிப்பிட்டார்.
நம்பிக்கையைப் பேணி வளர்க்க வேண்டும் என்றால் தலைவர்கள் எடுத்துக்காட்டாகத் திகழ வேண்டியது மிக முக்கியமானது என்பதை வலியுறுத்திய பிரதமர், ஒரே விதி எல்லாருக்கும் பொருந்தும் என்று தெரிவித்தார்.
தலைவர்கள் தங்களுடைய அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்துவதால் எல்லாம் தவறாகிவிடுகின்ற, பொதுமக்கள் நம்பிக்கையை இழக்கின்ற, அரசாங்கத்தின் நம்பகத்தன்மை சிதைந்துவிடக்கூடிய சூழலை வேறு இடங்களில் நாம் கண்டிருக்கிறோம் என்பதை சுட்டிக்காட்டிய திரு லீ, அதிகாரிகளும் தலைவர்களும் ஒருபோதும் தங்கள் அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்றார்.
குடிமக்கள் என்ற முறையில் சிங்கப்பூரர்கள் ஒருவர் மற்றொருவர் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்ற திரு லீ, சட்ட திட்டங்கள் தேவை என்றாலும் அவை போதாது என்று கூறினார்.