மக்கள் செயல் கட்சி, தனது முடிவுகளையும் கொள்கை நிலைகளையும் இன்னும் சிறந்த முறையில் விளக்க ஏதுவாக நேற்று புதிதாக சமூக அரசியல் இணையத்தளம் ஒன்றைத் தொடங்கியது.
Petir.sg என்ற அந்தப் புதிய இணையத்தளம், மசெகவின் செய்திக் கடிதமான 'பெட்டிரின்' மின்னிலக்க அங்கமாக இருக்கும்.
மசெக மாநாடு நேற்று நடந்தது. அதில் புதிய இணையத்தளம் தொடங்கப்பட்டது.
மாநாட்டில் உரையாற்றிய கட்சியின் தலைமைச் செயலாளரும் பிரதமருமான லீ சியன் லூங், மின்னிலக்க யுகத்தைக் கருத்தில் கொண்டு அதற்குத் தோதாக கட்சி தனது தகவல்தொடர்பு ஏற்பாடுகளை, மக்களை எட்டுவதற் கான ஏற்பாடுகளை மேம்படுத்த வேண்டிய தேவை இருப்பதாகத் தெரிவித்தார்.
"இந்த ஏற்பாடுகளைச் செம்மையான முறையில் மேம்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. மக்கள் சமூக ஊடகத்தில் அல்லது இதர தளங்களில் எங்கு இருந்தாலும் அவர்களை எட்ட வேண்டிய தேவை இருக்கிறது," என்று அவர் கூறினார். குறிப்பாக தேர்தல் பிரசார காலத்தில் இது மிக முக்கியமானது என்றார் அவர்.
மசெக தனது செயல் இயந்திரத்தைப் பலப்படுத்த இதர இரு செயல்களைச் செய்யவேண்டும் என்ற திரு லீ, கட்சிக் கிளைகளின் செயலாற்றல்களைத் தீவிரப்படுத்துவதும் உறுப்பியத்தைப் புதுப்பிப்பதும் அந்த இரண்டு காரியங்கள் என்றார்.
மசெக, தனது 93 கிளைகளுக்கு இடையில் தலைசிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்ளும் என்றும் பழுத்த அனுபவசாலிகள் இளையருக்கு வழிகாட்ட ஏற்பாடுகளைச் செய்யும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
மசெக தொண்டர்கள் தேர்தல் நேரத்தில் மட்டுமின்றி கட்சியின் வெள்ளை சீருடையுடன் அப்போதைக்கு அப்போது மக்கள் கண்ணில் பட வேண்டும் என்றும் திரு லீ குறிப்பிட்டார்.