அரசியல் தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியே யும் சொல்வதற்கு ஏற்ப நடந்துகொள்ள வேண்டும் என்று பிரதமர் லீ சியன் லூங் மக்கள் செயல் கட்சி மாநாட்டில் வலியுறுத்திக் கூறினார்.
சிங்கப்பூர் அரசியல் நேர்மையை மிக முக்கியமாகக் கருதுவதாகவும் அதனால் நற்பயன்கள் ஏற்பட்டுள்ள தாகவும் திரு லீ தெரிவித்தார்.
அரசியல்வாதிகள் நேர்மையற்ற முறையில் நடந்துகொண்டால் வாக்காளர்கள் அவர்களின் நோக்கத்தை நம்ப முடியாமல் போய்விடும். அத்தகைய அரசியல்வாதிகள் சொல்வதை மக்கள் நம்பமாட்டார்கள் என்று திரு லீ குறிப்பிட்டார்.
மக்கள் செயல் கட்சி 1959ல் அதிகாரத்துக்கு வந்ததுமே கடுமையான தரங்களைக் கட்சி நிலைநாட்டி வந்திருக்கிறது என்பதை திரு லீ சுட்டிக்காட்டினார். இது அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சித் தொண்டர்கள் அனைவருக்கும் தெரியும் என்றார்.
மசெகவின் உறுதியான நிலைப்பாடு இங்கு அரசியலுக்கு உருவம் கொடுக்கிறது. இதேபோன்ற நேர்மையான உயர்தரம், அரசியலில் எத்தரப்பிலும் ஈடுபடும் ஒவ்வொருவரிடத்திலும் இருக்கவேண்டும் என்பதை வாக்காளர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று திரு லீ கூறினார்.
இப்படிச் செய்யவில்லை என்றால் அது சிங்கப்பூர் தன்னுடைய தரங்களைக் குறைத்துக்கொள்ள ஆயத்தமாகிறது என்பதற்கான அறிகுறியாகவே இருக்கும் என்றார் அவர். இதன் முடிவில் நிர்வாக முறை பாதிக்கப்பட்டுவிடும்.
அரசியல் என்பது மக்களின் வாழ்க்கை மற்றும் எதிர்காலத்தை தீர்மானிப்பது என்றாரவர். தொற்று காலத்தில்கூட இந்த முறை தொடர்கிறது என்பதை சுட்டிக்காட்டிய திரு லீ, கொவிட்-19 தொற்றைச் சமாளிக்க போராடும் அதேநேரத்தில், சமூக ஏற்றத்தாழ்வைக் குறைக்க வேண்டும் என்ற முக்கியமான இலக்கை நிறைவேற்றவும் நாடு பாடுபடுகிறது என்றார்.
சமூகப் பிணைப்பைப் பலப்படுத்துவதற்கான தனது முயற்சிகளை சிங்கப்பூர் பலமடங்காக்குவதாகவும் அவர் கூறினார். நல்ல கொள்கைகள் மட்டும் போதுமானது அல்ல என்று கூறிய அவர், அரசாங்கத்தின் கொள்கைகள் மக்களின் வாழ்வில் எந்த அளவுக்கு வேறுபாட்டைச் சாதித்து உள்ளன என்பதை மக்கள் புரிந்துகொண்டு அங்கீகரிக்க மசெக உதவ வேண்டும் என்றும் திரு லீ கூறினார்.
தவறான கண்ணோட்டங்களை உறுதியான முறையில், முடிந்தால் கண்ணியமான முறையில் மறுத்து அவற்றுக்குச் சரியான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் திரு லீ குறிப்பிட்டார்.
சிங்கப்பூர்-இந்தியா விரிவான பொருளியல் ஒத்துழைப்பு உடன்பாடு, வேலை அனுமதிதாரர்கள் பற்றி செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் 10 மணி நேரம் விவாதம் நடந்தது. அப்போது இத்தகைய உணர்வுதான் கருத்தில் கொள்ளப்பட்டது என்று திரு லீ கூறினார்.