ஓமிக்ரான் என்ற புதிய உருமாறிய கொரோனா கிருமி பற்றி மேலும் பலவற்றைப் புரிந்துகொள்ள உடனடியாக ஏராளமான பணிகளைச் செய்யவேண்டி இருப்ப தாக தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையம் கூறுகிறது.
ஓமிக்ரான் அண்மையில்தான் தலைதூக்கி இருக்கிறது என்றாலும் பிசிஆர் பரிசோதனையில் அது பற்றி எப்படியும் தெரிந்துவிடும் என்று அந்த நிலையம் நேற்று மேலும் கூறியது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேள்விகளுக்குப் பதிலளித்த நிலையத்தின் பேச்சாளர், ஓமிக்ரான் பற்றி மேலும் பலவற்றைப் புரிந்துகொள்ள ஏராளமான பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டி இருக்கிறது என்றார்.
அந்தக் கிருமி எவ்வளவு வேகமாகப் பரவும், தொற்று அறிகுறி எப்படி இருக்கும், மருந்தகப் பரிசோதனைகள், எந்த அளவுக்குப் பாதிப்பு இருக்கும், தடுப்பூசி மூலம் எந்த அளவுக்குத் தடுப்பாற்றல் ஏற்படும் உள்ளிட்ட பலவற்றையும் பற்றி தெரிந்துகொள்ள அவசரமாக பல பணிகளைச் செய்ய வேண்டிய நிலை இருக்கிறது என்று அவர் விளக்கினார்.
இப்போது பயன்படுத்தப்படும் பரிசோதனைகள் மூலம் ஓமிக்ரான் தொற்று அநேகமாக தெரியவந்துவிடும் என்றும் அவர் கூறினார்.
ஓமிக்ரான் பற்றி மேலும் பல தகவல்களைப் புரிந்துகொள்ள ஏதுவாக இந்த நிலையம் நிலவரங்களைத் தொடர்ந்து அணுக்கமாகக் கண்காணித்து வரும்.
அனைத்துலக ரீதியில் பல அமைப்புகளோடும் சேர்ந்து செயல்படும் என்றும் அந்தப் பேச்சாளர் தெரிவித்தார்.
ஓமிக்ரான் கிருமி கவலை தரக்கூடிய ஒன்று என்று உலக சுகாதார நிறுவனம் அண்மையில் வகைப்படுத்தியது. அது புதிய மிரட்டலாகி உள்ளது.