இளையருக்கு இடமளித்து அவர்கள் பல பொறுப்புகளில் பங்காற்று மாறு செய்யவேண்டிய தேவை மக்கள் செயல் கட்சிக்கு இருப்பதாக அதன் தலைவரும் வர்த்தக தொழில் அமைச்சருமான கான் கிம் யோங் தெரிவித்தார்.
மக்கள் செயல் கட்சி (மசெக) மாநாட்டைத் தொடங்கிவைத்துப் பேசிய அவர், இன்னும் சிறந்த நாட்டை தாங்கள் விரும்புவதாக சிங்கப்பூரர்கள் கூறுகிறார்கள் என்றார். அவர்களில் பலரும் இந்த முயற்சியில் நம்முடன் சேர்ந்துகொண்டு சிங்கப்பூர் வரலாற்றின் அடுத்த அத்தியாயத்தை எழுத விரும்புகிறார்கள் என்று திரு கான் குறிப்பிட்டார்.
"இளையர்களில் பலரும் தங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் பங்கெடுத்துக்கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள். முன்பு இல்லாதபடி அவர்கள் இப்போது அதிக குரல் கொடுக்கிறார்கள்.
"இப்படிப்பட்ட நிலையில் கட்சியிலும் சிங்கப்பூரின் முன்னேற்றப் பாதையை வகுப்பதிலும் தங்களுக்கு இடம் இருக்கிறது, பொறுப்பு இருக்கிறது என்ற எண்ணத்தை அவர்களிடம் ஏற்படுத்த வேண்டும்," என்று திரு கான் வலியுறுத்தினார்.
மாநாட்டில் பேசிய புக்கிட் தீமா மசெக கிளைச் செயலாளர் கோ ஸி கீ, அடித்தளத்தைப் பற்றி இன்னும் சிறப்பாகப் புரிந்துகொள்ள வேண்டும். செம்மையான தகவல் தொடர்பு இருக்கவேண்டும் என்றார்.
இவற்றை உறுதிப்படுத்த கண்ணோட்டத்தில் பன்மயம் தேவை என்றும் கட்சியில் புதுப்பிப்பு அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அங் மோ கியோ குழுத்தொகுதி உறுப்பினரான குமாரி நடியா சாம்டின், கட்சியும் தொண்டர்களும் மற்றவரின் எண்ணங்களை, உணர்வுகளைப் புரிந்துகொள்வதில் உள்ள தங்கள் பலவீனங்களைச் சரிப்படுத்திக்கொண்டு, தங்களுக்கு இணக்கமில்லா கருத்துகளை, கண்ணோட்டங்களை நன்கு புரிந்து கொள்ளும் போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இளையர்களுக்கு மரியாதை கொடுத்து அவர்களின் கருத்துகளுக்குச் செவிசாய்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பொது ஊழியர் ஒருங்கிணைந்த தொழிற்சங்கத்தின் தலைமைச் செயலாளர் சஞ்ஜிவ் குமார் திவாரி, மக்கள் செயல் கட்சிக்கும் தொழிற் கங்கங்களுக்கும் இடைப்பட்ட உறவைப் பலப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.