கி. ஜனார்த்தனன்
சிங்கப்பூரின் தொலைத்தொடர்புத் துறையில் தற்போது தலைதூக்கியுள்ள 5ஜி தொழில்நுட்பம், வரும் ஆண்டுகளில் பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கித் தரும் என்ற ஊகமே, அதைப் பயிலும் உந்துதலை ரமணனுக்குத் தந்தது.
தொழில்நுட்பப் பின்புலன் இல்லாத 31 வயது ரமணன் கலைச்செல்வம், 5ஜி திறன்பேசித் தொழில்நுட்பத்தில் கடந்த ஆண்டு பயிற்சி பெற்ற 3,000 பேரில் ஒருவர்.
தகவல் தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் 'டெக்ஸ்கில்ஸ் எக்செலரேட்டர்' திட்டத்தின்கீழ் சிங்டெல் நிறுவனம் நடத்திய 12 மாத 5ஜி பயிற்சித் திட்டத்தில் சேர்ந்தார். 5ஜி கட்டமைப்புகளை இயக்குவது, அவற்றைப் பராமரிப்பது, 5ஜி சேவைகளை உருவாக்குவது ஆகிய அம்சங்களை ரமணன் கற்றுக்கொண்டார்.
"5ஜி தொழில்நுட்பத்தால் பல சூழல்களுக்கு நம்மால் தீர்வு காண முடியும் 5ஜி யுகத்திற்காகத் தயாராகும் சிங்கப்பூரின் முக்கிய முயற்சியில் அங்கம் வகித்திருப்பதை நினைத்து நான் பெருமை அடைகிறேன்," என்று இவர் கூறுகிறார்.
சிங்கப்பூருக்குத் தேவைப்படும் உன்னத திறன்களில் ஒன்றானது 5ஜி தொழில்நுட்பம். இதன் தொடர்பில் 2023ஆம் ஆண்டுக்குள் 5,000 திறனாளர்களை உருவாக்கும் திட்டம் கடந்தாண்டு அறிவிக்கப்பட்டது.
அரசாங்கத்தின் இந்தக் குறிக்கோளை முன்னதாகவே அடையும் சாத்தியம் இருப்பதாகக் கூறிய தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ, நாட்டின் மின்னிலக்க உருமாற்றத்திற்கு 5ஜி, செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்பங்களே முக்கிய படிகள் என்றார்.
தற்போதைய 4ஜி தொழில்நுட்பத்தைக் காட்டிலும் 10 மடங்கு வேகத்தில் செயல்படும் 5ஜி தொழில்நுட்பம், 2025ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூர் முழுவதும் பயன்பாட்டுக்கு வரும் என்று வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் ஆகஸ்ட் மாதம் தெரிவித்தார்.
2015ஆம் ஆண்டில் சிங்டெல் நிறுவனத்தில் சேர்வதற்கு முன், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் வர்த்தகத் துறையில் பட்டம் பெற்றவர் ரமணன். அதற்கு முன்னதாக அவர் சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியில் வர்த்தகத் துறையில் பட்டயக் கல்வி பயின்றார்.
சந்தைப்படுத்துதல் தொடர்பான பாடத்தை முக்கியமாக எடுத்துப் படித்துவந்த போதும் வர்த்தகத் துறையில் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் பெருகிவந்ததை உணர்ந்தார்.
வாரத்தில் மூன்று, நான்கு முறை வகுப்புகளும் பயிற்சிகளும் இருந்ததாகக் குறிப்பிட்ட ரமணன், பணித்திட்டம் மற்றும் தேர்வு அடிப்படையில் மதிப்பீடு அமைந்ததாகக் கூறினார்.
சந்தேகங்களைப் பயிற்சியில் தம்முடன் பங்கேற்றவர்கள், தம்முடைய பயிற்றுவிப்பாளர்கள் ஆகியோரிடம் கேட்டுத் தெளிவு பெற்றதாகவும் இதனால் மேலும் விரைவாக தம்மால் கற்க முடிந்ததாகவும் ரமணன் பகிர்ந்துகொண்டார்.
ஆளில்லா வானூர்திகள், இயந்திர மனிதர்கள் போன்ற தொழில்நுட்ப அம்சங்கள், 5ஜி யுகத்தில் அன்றாட வர்த்தகத் தேவைகளை நிறைவு செய்வதற்கான சாதனங்களாக விளங்கும். அதனால் அவற்றைக் கொண்டு திட்டமிடும் ஆற்றலை இப்போதே நம்மிடையே வித்திட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
வேலையிடங்கள் மட்டுமின்றி கணினி விளையாட்டுகள், இணையக் காணொளிச் சேவைகள் மீதும் ஆர்வமிருப்பவர்களுக்கு மேம்பட்ட தரத்தை 5ஜி வழங்குகிறது என்று கூறினார்.
"சந்தைப்படுத்தும் உத்தியாக இணைப்பு நிஜமாக்கம் (Augmented Reality) மாறத் தொடங்கிவிட்டன. அவற்றை நாம் வெறும் விளையாட்டாக கருதாமல் வர்த்தக உத்திகளாகவும் பார்க்கவேண்டும்," என்று கடந்த ஆறு ஆண்டுகளாக சிங்டெல் நிறுவனத்தில் மேம்பாட்டு, செயல்பாட்டு மேலாளராகப் பணியாற்றும் ரமணன் தெரிவித்தார்.
5ஜி திறன்களைக் கற்றுக்கொள்ள விரும்புவோருக்கு மேலும் பல வளங்கள் கிடைக்கப்பெற உள்ளன. புதிய பயிற்சி இணையத்தளம் ஒன்றை சிங்கப்பூர் 5ஜி, தொலைத்தொடர்பு பயிற்சிக் கழகம் (Singapore 5G and Telecoms Academy) தொடங்கவுள்ளது. சிங்கப்பூரின் உயர்கல்வி நிலையங்களில் நடக்கும் 500க்கும் மேற்பட்ட 5ஜி பயிற்சி வகுப்புகளில் ஆர்வமுள்ளோர் சேரலாம்.

