யோகா வகுப்புகளின்போது பெண்களைத் தகாத முறையில் தீண்டிய ஆண் யோகா பயிற்றுவிப்பாளர் மீது மானபங்கக் குற்றச்சாட்டு நாளை சுமத்தப்படும்.
மானபங்கம் தொடர்பான 10 குற்றச்சாட்டுகளை அந்த 32 வயது ஆடவர் எதிர்நோக்குவார் என எதிர்பார்க்கப்படுவதாக போலிசார் தெரிவித்தனர். 24 வயதுக்கும் 38 வயதுக்கும் இடைப்பட்ட ஐந்து பெண்களை மானபங்கம் செய்ததாக அவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
ஏற்கெனவே அந்த ஆடவர் சில மாணவிகளிடம் அவ்வாறு நடந்துகொண்டதாகப் புகார் கொடுத்திருந்த ஒருவர் தி நியூ பேப்பர் செய்தித்தாளிடம் கடந்தாண்டு தெரிவித்தார்.
தனிப்பட்ட பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பாலியல் குற்றவாளிகளைச் சற்றும் சகித்துக்கொள்ள முடியாத நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாக போலிஸ் தெரிவித்தது. குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டவர்களுக்கு ஈராண்டு வரையிலான சிறைத்தண்டனையுடன் பிரம்படியும் விதிக்கப்படலாம்.