மலேசியப் பிரதமர் யோசனைக்கு வரவேற்பு; இரு நாட்டு போக்குவரத்து அமைச்சுகளும் விவாதிக்கும் என பிரதமர் லீ அறிவிப்பு
சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான பல்வேறு ஒத்துழைப்பு திட்டங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் நேற்று சிங்கப்பூரில் விவாதித்தனர்.
சிங்கப்பூருக்கு அதிகாரபூர்வ வருகை மேற்கொண்ட மலேசிய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புடன் பிரதமர் லீ சியன் லூங் பேச்சு நடத்தினார். அதற்குப் பிறகு இருவரும் சேர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
ஜோகூர் பாரு-சிங்கப்பூர் துரித ரயில் திட்டம் உள்ளிட்ட பல துறைகளிலும் ஒத்துழைப்பது பற்றி தாங்கள் விவாதித்ததாக பிரதமர் திரு லீ கூறினார். இந்தத் திட்டம் தொடர்பில் கட்டுமானப் பணிகள் நடந்து வருவதாகவும் 2026 முடிவில் பயணச் சேவை தொடங்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் சிங்கப்பூர் பிரதமர் குறிப்பிட்டார்.
கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக ரயில் திட்டம் பற்றி தாங்கள் விவாதித்ததாகவும் திரு லீ கூறினார். இந்தத் திட்டம் முடித்துக்கொள்ளப்பட்டு இருக்கிறது.
இருந்தாலும் இதன் தொடர்பிலான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கலாம் என்று மலேசிய பிரதமர் யோசனை கூறினார்.
இந்த அதிவேக ரயில் திட்டம் பற்றி மலேசியாவிடம் இருந்து புதிய யோசனைகளை சிங்கப்பூர் வரவேற்கிறது என்றும் இது பற்றி இரு நாட்டு போக்குவரத்து அமைச்சுகளும் விவாதிக்கும் என்றும் திரு லீ குறிப்பிட்டார்.
ஜோகூரில் இஸ்கந்தர் மலேசியா பொருளியல் வளாகத்தை அமைப்பதற்கு சிங்கப்பூர் தொடர்ந்து ஆதரவு அளிப்பதாகவும் திரு லீ கூறினார். தனிப்பட்ட முறையில் மலேசியப் பிரதமரைச் சந்தித்து இரு நாடுகளுக்கும் இடைப்பட்ட வலுவான இருதரப்பு உறவை மறுஉறுதிப்படுத்திக் கொண்டது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக திரு லீ கூறினார்.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மலேசியப் பிரதமரை வரவேற்று ஓய்வுத்தளச் சந்திப்பு கூட்டம் நடத்த தான் ஆர்வமாக இருப்பதாகவும் திரு லீ கூறினார். இஸ்தானாவில் மலேசியப் பிரதமருக்குச் சிறப்பான வரவேற்புடன் பகல் விருந்தளித்தும் சிறப்பிக்கப்பட்டது.
விருந்தில் சிங்கப்பூரர்கள், மலேசியர்கள் விரும்பும் கார நண்டு கறி, ரோஜாக் உள்ளிட்ட பலவும் இடம்பெற்று இருந்தன.
என்றாலும் டுரியான் பழங்கள் இடம்பெறவில்லை என்று மலேசியப் பிரதமருக்கு விருந்தளித்துச் சிறப்பித்த சிங்கப்பூர் பிரதமர் திரு லீ தெரிவித்தார். இந்த உணவு இரு நாடு களும் அணுக்கமாக ஒன்றை ஒன்று பின்னிப் பிணைந்து இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுவதாகவும் திரு லீ குறிப் பிட்டார்.
மலேசிய பிரதமரைப் பெருமைப்படுத்தும் வகையில் அவரின் பெயர் சூட்டப்பட்ட இளஞ்சிவப்புநிற ஆர்க்கிட் மலர் அவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. திரு இஸ்மாயில் அதிபர் ஹலிமா யாக்கோப்பை நேற்றுச் சந்தித்தார்.
இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய மலேசியப் பிரதமர், சிங்கப்பூருக்கும் மலேசியாவின் பல நகர்களுக்கும் இடையில் விமானத் தொடர்புகளைத் தொடங்கும் சாத்தியம் பற்றி சிங்கப்பூர் பிரதமருடன் தான் விவாதித்ததாகக் கூறினார்.
இதன் தொடர்பில் இரு நாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என்று தானும் திரு லீயும் முடிவு செய்து இருப்பதாகவும் மியன்மார் பற்றி தாங்கள் பேசியதாகவும் திரு இஸ்மாயில் கூறினார்.

