தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான, தனிமை உத்தரவற்ற பயணத் திட்டத்தின்கீழ் (விடிஎல்) நேற்று கோலாலம்பூர், இந்தியா, இந்தோனீசியாவில் இருந்து விமானங்கள் சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்கின.
ஓமிக்ரான் என்ற கிருமி தலையெடுப்பதால் அனைத்துலக எல்லைகள் மறுபடியும் மூடப்படலாம் என்ற அதிகரித்து வரும் அச்சத்திற்கு இடையே நேற்று சிங்கப்பூரில் அந்த விமானங்கள் தரையிறங்கின. அவற்றோடு பின்லாந்து, சுவீடன் நாடுகளுக்கான விடிஎல் பயணத் திட்டங்களும் திட்டமிட்டபடி நேற்று தொடங்க இருந்தன.
சாங்கி விமான நிலையத்தில் நேற்று மொத்தம் 29 விடிஎல் விமானங்கள் தரையிறங்க இருந்தன. அவற்றில் 10 சேவைகள் புதிய விடிஎல் நகர்களில் இருந்து வரவிருந்தன. மலேசியாவில் இருந்து ஆறு விமானங்களும் இந்தோனீசியா, இந்தியாவில் இருந்து தலா இரண்டு விமானங்களும் அவற்றில் அடங்கும்.
இவ்வேளையில், நேற்று சிங்கப்பூரில் இருந்து புறப்பட்ட முதலாவது விடிஎல் விமானம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் காலை 9.20 மணிக்குத் தரையிறங்கியது.
அந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் 240 பயணிகள் சென்றனர். தரையிறங்கிய விமானம் தண்ணீர் தெளித்து வரவேற்கப்பட்டது. கோலாலம்பூரில் இருந்து புறப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முற்பகல் 11.35 மணிக்கு சிங்கப்பூர் வந்தது.
நேற்று தொடங்கிய புதிய விடிஎல் பயணத் திட்டங்களை அடுத்து இப்போது 18 நாடுகளைச் சேர்ந்த தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள், தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய தேவை இன்றி சிங்கப்பூர் வரமுடியும்.