திருமணமான வர்த்தகர் ஒருவர், மற்றொரு ஆணுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதை ரகசியமாக படம்பிடித்து அவரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி செய்த மூவரை போலிசார் கைது செய்துள்ளனர்.
சுமார் $60,000 வெள்ளி அவரிடமிருந்து பறிக்க ஆரம்பத்தில் திட்டம் தீட்டப்பட்டது. பின்னர் அந்தத் தொகை $50,000க்கு குறைக்கப் பட்டது.
ஆனால் பணம் கைமாறுவதற்கு முன்பாகவே மூவரும் கைதாகினர். தற்போது பிணையில் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அப்போதும் மூவரில் ஒருவரான டான், எப்படியாவது 53 வயது வர்த்தகரிடமிருந்து பணத்தை பறித்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதனால் நான்காவது நபராக மகாதேவன் எட்வினை தனது சதித் திட்டத்தில் சேர்த்துக் கொண்டார்.
அந்த சமயத்தில் 24 வயதான மகாதேவனிடம் பணத்தைப் பாதியாகப் பிரித்துக் கொள்ளவும் டான் சம்மதித்தார்.
நேற்று மகாதேவன் மீதான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வர்த்தகரை மிரட்டிய குற்றத்தை ஒப்புக்கொண்ட தற் போது 29 வயதாகும் மகாதேவனுக்கு 18 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சிங்கப்பூரரான மகாதேவன் ஏற்கெனவே சிறை சென்றவர். குற்றச் செயல்களிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் கீழ் 2019ஆம் ஆண்டின் பிற்பகுதி யில் அவர் சிறையிலிருந்து விடு விக்கப்பட்டார்.
இதை மீறியதால் கூடுதலாக 59 நாட்கள் சிறைத்தண்டனையை அவர் அனுபவிக்க நேரிட்டுள்ளது.
டான் யோங் ஜியான், டேரின் ஹோ யோங் ஜியான் மற்றும் வர்த்தகரின் முன்னாள் உதவியாளர் ஆகிய மூவரும் இதற்கு முன்னர் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டுள்ளனர்.
வர்த்தகர் மற்றும் அவரது முன்னாள் உதவியாளரின் பெயரை வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
2019ஆம் ஆண்டு பிற்பகுதியில் உதவியாளர், வர்த்தகரின் வீட்டில் ரகசிய கேமராவை நிறுவி அவர் மற்றொரு ஆணுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதை படம்பிடித்தார்.
பின்னர் உதவியாளர், டான், ஹோ ஆகிய மூவரும் அவரிடம்இருந்து பணத்தைப் பறிக்க திட்டம் தீட்டினர்.
வர்த்தகர் இது பற்றி போலிசில் புகார் அளித்ததால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 13ஆம் தேதி மூவரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் தற்போது பிணையில் உள்ளனர்.
இந்த நிலையில் மகாதேவன் மூலம் வர்த்தகரிடமிருந்து பணத்தைப் பறிக்க டான் திட்டம் போட்டார்.
இதற்காக வர்த்தகரின் ரகசிய காணொளி, அவரது பின்னணி விவரங்களை மகாதேவனிடம் யோங் ஜியான் பகிர்ந்துகொண்டார்.
டானும் வர்த்தகரின் கைபேசி எண்ணை மகாதேவனுக்கு வழங்கினார். இவற்றைப் பெற்றுக் கொண்ட மகாதேவன், கடந்த ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி 4.20 மணியளவில், 24 மணி நேரத்தில் $50,000 ஒப்படைக்க வேண்டும் என்று வர்த்தகருக்கு குறுந்தகவல் அனுப்பினார்.
ஆணுடன் பாலியல் உறவு கொண்ட காணொளியை சமூக ஊடகங்களில் வெளியிட்டுவிடுவதாகவும் மகாதேவன் குறுந்தகவல் மூலம் மிரட்டியிருந்தார்.
இதற்கு வர்த்தகர் உடனடியாக பதில் அளிக்கவில்லை. மறுநாள் பிற்பகல் 3.00 மணியளவில் 50,000 வெள்ளியை புரட்ட ஒரு வாரம் அவகாசம் தேவை என்று வர்த்தகர் பதில் அனுப்பினார். தாமதமாக வந்த பதிலால் சந்தேகமடைந்த மகாதேவன் தன்னைப் பிடிக்காமல் இருக்க கைபேசியையும் சிம் அட்டையையும் வீசிவிட்டார்.
அப்படியும் அதே நாள் இரவு 9.00 மணிக்கு மகாதேவன் போலிசாரிடம் பிடிபட்டார்.

