கொவிட்-19 உருமாறிய டெல்டா கிருமியுடன் வாழப் பழகிக்கொள்வதில் சிங்கப்பூர் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது.
ஆனால் திடீரென தலைதூக்கி இருக்கும் ஓமிக்ரான் புதிய பிரச்சினையாகிவிட்டது.
இந்த நிலையில், புதிய ஓமிக்ரான் கிருமி பற்றி ஐந்து முக்கிய அம்சங்களை நாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நேற்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
கொவிட்-19 உருமாறிய கிருமி களில் டெல்டா கிருமி தலைதூக்கியதைப் போல ஓமிக்ரான் இதர கிருமிகளைவிட அதிக ஆதிக்கம் செலுத்தும் ஒன்றாக இருக்குமா என்பதை சிங்கப்பூர் தெரிந்து கொள்ள வேண்டும்.
டெல்டா கிருமி உலகம் முழுவதும் பரவுவதற்கு ஏறத்தாழ மூன்று முதல் நான்கு மாத காலம் பிடித்தது. ஓமிக்ரான் வேகமாக பரவக்கூடிய கிருமியாக இருந்தால் அது, மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு முன்னதாகவே தன் பிடியின்கீழ் உலகைக் கொண்டுவந்துவிடும்.
என்றாலும் பல நாடுகளும் உடனடியாக புதிய எல்லை கட்டுப் பாடுகளை நடப்புக்குக் கொண்டு வருவதால் ஓமிக்ரான் பரவும் வேகத்தைக் குறைக்க முடியும்.
இடைப்பட்ட காலத்தில் அது பற்றி நன்றாகப் புரிந்துகொண்டு ஏற்புடைய அமலாக்க நடவடிக்கைகளை நாம் நடைமுறைப்படுத்தலாம். இதர உருமாறிய கிருமிகளைக் கண்டறிவதைப் போல ஏஆர்டி பரிசோதனையும் இதர பரிசோதனையும் ஓமிக்ரான் கிருமி யையும் கண்டறியுமா என்பது நாம் தெரிந்துகொள்ள வேண்டியது மூன்றாவது அம்சம்.
இதைப் பொறுத்தவரை, தெர்மோஃபிஷர் என்ற நிறுவனத்தின் குறிப்பிட்ட பரிசோதனை உதவும். ஒருவருக்கு ஓமிக்ரான் தொற்றும் வாய்ப்பு இருக்கிறதா என்பதை அந்தப் பரிசோதனை கண்டுபிடிக்கும்.
ஓமிக்ரான் கிருமி எந்த அளவுக்குத் தொற்றும், அது டெல்டா கிருமியைவிட ஆபத்தானதா என்பது பற்றி நாம் புரிந்துகொள்ள வேண்டும். இது இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை.
ஓமிக்ரான் தொற்றினால் கடுமையான சுகாதாரப் பராமரிப்பு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டி இருக்கும்.
கொவிட்-19 முதன்முதலில் தலைகாட்டியபோது நடப்புக்கு வந்த அளவுக்கு அந்தக் கட்டுப்பாடுகள் இருக்கும்.
ஓமிக்ரான் தொற்றியதாக சந்தேகம் ஏற்பட்டால் அவர்கள் தொற்றுநோய்க்கான தேசிய நிலையத்தில் தனிமைப்படுத்தப்படுவார்கள். வீட்டில் இருந்து குணமடைய அனுமதி இருக்காது.
இப்போது நடப்பில் உள்ள தடுப்பூசிகள் எந்த அளவுக்கு ஓமிக்ரானுக்கு எதிராக செயல்படும் என்பது நாம் புரிந்துகொள்ள வேண்டிய ஐந்தாவது அம்சம்.
தென்னாப்பிரிக்காவைப் பொறுத்தவரை, கடுமையான ஓமிக்ரான் தொற்று அறிகுறிகளுக்கு ஆளாகி இருப்போரில் 65 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள். எஞ்சிய 35 விழுக்காட்டினர் முழுமையான தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள். இந்தப் புள்ளிவிவரங்கள் பூர்வாங்கமானவைதான் என்றாலும் தடுப்பூசிகள் இன்னமும் பலனளிக்கின்றன என்ற முடிவுக்கே நாம் வரலாம்.
ஆகையால், மக்கள் தடுப்பூசிகளையும் பூஸ்டர் ஊசியையும் தொடர்ந்து போட்டுக்கொள்ள வேண்டும் என்று திரு ஓங் வலியுறுத்தினார்.

