புதிய உருமாறிய கொவிட்-19 ஓமிக்ரான் கிருமி பற்றி இனிமேல்தான் மேலும் பல விவரங்கள் வரவேண்டும். இந்நிலையில், நாளை இரவு 11.59க்குப் பிறகு சிங்கப்பூர் வரும் பயணிகள் அனைவருக்கும் பரிசோதனை நடைமுறைகளை சிங்கப்பூர் மேம்படுத்துகிறது.
இந்த நடைமுறைகள் நான்கு வார காலத்திற்கு தொடரும். அவற்றை நீட்டிக்க வேண்டுமா என்பது பற்றி பிறகு முடிவு செய்யப்படும்.
இதன்தொடர்பில் பொதுமக்கள் பல நிலவரங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
சிங்கப்பூருக்கு வரும், சிங்கப்பூர் வழியாகச் செல்லும் விமானப் பயணிகள் அனைவரும் பயணப் புறப்பாட்டுக்கு முன் இரண்டு நாட்களுக்குள் பரிசோதனைக்கு உட்பட வேண்டும்.
தொற்று இல்லை என்பது உறுதியாக வேண்டும். சிங்கப்பூரில் தரையிறங்கும்போது பிசிஆர் சோதனைக்குப் பயணிகள் உட்பட வேண்டும்.
தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான விமானப் பயண திட்டத்தின்கீழ் வருவோருக்கு கூடுதலாக ஏர்ஆர்டி சோதனை நடத்தப்படும்.
இவை ஒருபுறம் இருக்க, அதிக தொற்று ஆபத்துள்ள நாடுகளுக்கும் வட்டாரங்களுக்கும் ஏதாவது பயண ஏற்பாடு இருந்தால் அதை ஒத்திவைக்கும்படி சிங்கப்பூர்வாசிகள் அனைவருக்கும் ஆலோசனை கூறப்படுகிறது.
ஓமிக்ரான் தலைதூக்கி இருப்பதாகத் தெரியவந்துள்ள நாடுகளுக்கு அல்லது வட்டாரங்களுக்கு யாராவது சென்று இருப்பார்களேயானால் அவர்கள் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும்.
அதாவது முகக்கவசங்களை அணிவது, சொந்த சுகாதாரப் பழக்கவழக்கங்களைக் கடைபிடிப்பது, பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடிப்பது போன்ற நிபந்தனைகள் அந்த நாடுகளில் கட்டாயமானவை அல்ல என்றாலும் அவற்றை அத்தகைய நாடுகளுக்குச் சென்றிருப்போர் முற்றிலும் கடைபிடிக்க வேண்டும்.
சிங்கப்பூருக்கு நவம்பர் 12க்கும் 27ஆம் தேதிக்கும் இடையில் வந்த பயணிகள், சிங்கப்பூர் வருவதற்கு 14 நாட்களுக்கு முன் ஓமிக்ரான் பாதித்துள்ள நாடுகளுக்குச் சென்று இருந்தால் அவர்கள் ஒரு நேர பிசிஆர் பரிசோதனைக்கு உட்பட வேண்டும்.
பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தரையிறங்கியதும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்பட வேண்டும். பிறகு மூன்றாவது நாளன்றும், ஏழாவது நாளன்றும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்பட வேண்டும்.
இதர விமான நிலைய, எல்லைப்புற முன்களப் பணியாளர்கள் வாராந்திர ஏஆர்டி அடிப்படையிலான பரிசோதனைக்கு தொடர்ந்து உட்படுத்தப்படுவர். தொற்று இருப்பதாக தெரியவந்தால் பிசிஆர் பரிசோதனைக்கு உட்பட வேண்டும்.

