விமான நிலையத்தில், எல்லைப் புறங்களில் வேலை பார்க்கும் முன் களப் பணியாளர்களுக்குப் புதிய ஓமிக்ரான் கிருமியால் பாதிக்கப்பட்ட வட்டாரங்களில் இருந்து வரும் பயணிகளுடன் அணுக்கத் தொடர்பு ஏற்படக்கூடிய வாய்ப்பு உண்டு.
ஆகையால், அந்த ஊழியர்கள் நாளை முதல் வாராந்திர பிசிஆர் பரிசோதனைக்கு உட்பட வேண்டும். ஓமிக்ரான் கிருமி சிங்கப்பூரில் நுழைவதைத் தடுக்கும் முதல்நிலை அரணாக எல்லைகளே இருக்கின்றன என்பதே இதற்கான காரணம் என்று சுகாதார அமைச்சு நேற்று செய்தி அறிக்கையில் குறிப்பிட்டது.
விமான நிலைய ஊழியர்கள் இப்போது தொற்று ஆபத்துள்ள நாடுகளுக்கு ஏற்ப ஏஆர்டி சோதனைகளை ஒவ்வொரு ஏழு நாட்களுக்கும் ஒரு முறை அல்லது இரண்டு முறை செய்துகொள்கிறார்கள்.
பரிசோதனைகளை தீவிரப்படுத்தும் முயற்சியாக வாராந்திர பிசிஆர் பரிசோதனை நடைமுறை இடம்பெறுகிறது என்று நேற்று அமைச்சுகள்நிலை கொவிட்-19 பணிக்குழு இணைத் தலைவர்களில் ஒருவரான லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.
பயணிகளுடன் தொடர்புகள் ஏற்படும் நிலையில் உள்ள எல்லைப்புற ஊழியர்கள், விமான நிலையங்கள், கடல், தரை சோதனைச்சாவடிகளில் பணியாற்றுவோர் ஆகியோர் எல்லைப்புற முன்களப் பணியாளர்களில் அடங்குவர் என்றார் திரு வோங்.
பாதிக்கப்பட்டு உள்ள நாடுகளில் இருந்து வரும் விமானங்களில் சேவையாற்றும் விமான ஊழியர்கள் தரையிறங்கியதும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுவார்கள். அதற்குப் பிறகு விமானப் பணி ஏற்கும் ஒவ்வொரு முறையும் மூன்றாம், ஏழாம் நாட்களில் அவர்கள் பிசிஆர் பரிசோதனைக்கு உப்பட வேண்டும்.
இதர விமான நிலைய, எல்லைப்புற முன்களப்பணியாளர்கள் தொடர்ந்து ஏஆர்டி அடிப்படையிலான பரிசோதனை ஏற்பாடுகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.
இருந்தாலும் ஒரு கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இத்தகைய ஊழியர்களில் யாருக்காவது ஏஆர்டி சோதனையில் தொற்று இருப்பதாக தெரியவந்தால், அவர் பிசிஆர் பரிசோதனைக்கு உட்பட வேண்டி இருக்கும் என்று அமைச்சு தெரிவித்தது.
குணமடைந்தவர்கள் உட்பட, எல்லைப்புறங்களில் வேலை செய்யும் முன்களப் பணியாளர்கள் அனைவரும் காலக்கிரம முறைப்படியான பரிசோதனை ஏற்பாட்டுக்கு உட்படவேண்டும்.
நமது எல்லையில் யாருக்காவது ஓமிக்ரான் தொற்று ஏற்பட்டால் இந்த ஏற்பாடுகளின் மூலம் நாம் அதைச் சரியான நேரத்தில் சிறந்த முறையில் கண்டுபிடித்துவிடலாம் என்று அமைச்சு விளக்கியது.
தென்னாப்பிரிக்காவில் தலைகாட்டி பல நாடுகளிலும் பரவத் தொடங்கி உள்ள புதிய உருமாறிய கொவிட்-19 ஓமிக்ரான் கிருமியைத் தவிர்த்துக்கொள்ளும் வகையில் நாளை இரவு 11.59க்குப் பிறகு சிங்கப்பூர் வரும் பயணிகள் அனைவருக்கும் பரிசோதனை நடைமுறைகளை சிங்கப்பூர் மேம்படுத்துகிறது.