சிங்கப்பூரில் திங்கட்கிழமை புதிதாக 1,103 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. அவர்களையும் சேர்த்து கொரோனா கிருமி தொற்றியோரின் மொத்த எண்ணிக்கை 263,486 ஆகியது.
வாராந்திர தொற்று அதிகரிப்பு விகிதம் ஞாயிற்றுக்கிழமை 0.69ஆக இருந்தது. இந்த அதிகரிப்பு விகிதம் தொடர்ந்து 17 நாட்களாக ஒன்றுக்கும் குறைவாகவே இருந்து வருகிறது. புதிய வாராந்திர தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதை இது காட்டு கிறது.
கொரோனா காரணமாக ஒன்பது பேர் மரணமடைந்தனர். அவர்களுக்கு வயது 58 முதல் 91 வரை. தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஒருவரைத் தவிர மாண்டவர்கள் அனைவருக்கும் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் இருந்தன. கொவிட்-19 மொத்த மரண எண்ணிக்கை 710 ஆகி உள்ளது.
புதிதாகக் கிருமி தொற்றியோரில் 1,070 பேர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் 183 பேருக்கு வயது 60 மற்றும் அதற்கும் அதிகம். வெளிநாட்டு ஊழியர் விடுதிகளைச் சேர்ந்தவர்கள் 25 பேர். எட்டுப் பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்று அமைச்சு தெரிவித்தது.
தீவிர சிகிச்சைப் பிரிவு பயனீட்டு அளவு திங்கட்கிழமை 51.2% ஆக இருந்தது.

