முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட வெவ்வேறு குடும்பங்
களைச் சேர்ந்த ஐந்து பேர் ஒரு குழுவாக அமர்ந்து சாப்பிட அனு
மதிக்கப்படும் உணவங்காடி நிலையங்களின் எண்ணிக்கை நேற்று அதிகரிக்கப்பட்டது.
ஏற்கெனவே 32ஆக இருந்த அத்தகைய உணவங்காடி நிலையங்களின் எண்ணிக்கையில் மேலும் 70 சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த எண்ணிக்கை 102 ஆகிவிட்டது. இவை தவிர மேலும் எட்டு உணவங்காடி நிலையங்களில் பழுது பார்ப்பு, மறுசீரமைப்பு போன்ற பணிகள் நடப்பதால் அவை திறக்கப்பட்டதும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்படும் என தேசிய சுற்றுப்புற வாரியம் அதன் இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது.
அவ்வாறு சேர்க்கப்பட்ட பின்னர் தீவு முழுவதும் தடுப்பூசி போட்ட ஐவரை அனுமதிக்கும் உணவங்காடி நிலையங்களின் எண்ணிக்கை 110க்கு அதிகரித்துவிடும் என்று 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' அறிகிறது. இந்த எட்டு உணவங்காடி நிலையங்களில் புளோக் 159 மெய் சின் ரோடு, காலாங் எஸ்டேட் சந்தை, அமோய் ஸ்திரீட் உணவு நிலையம் மற்றும் டன்மன் உணவு நிலையம் போன்றவையும் அடங்கும்.
புதுப்பிக்கப்பட்ட பின்னர் இந்த நான்கு உணவங்காடி நிலையங்களும் திறக்கப்படும் நாள்கள் டிசம்பர் 9 முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 28 வரை குறிக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்த உணவங்காடி நிலையங்கள் அனைத்தும் தேசிய சுற்றுப்புற வாரியம் அல்லது அந்த வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் நடத்தப்படுபவை என்றும் அந்த செய்தித்தாள் தெரிந்துகொண்டது.
தடுப்பூசி போட்டவர்களுக்கென தனிச்சலுகை காட்டப்படும் நட
வடிக்கையில் மேலும் ஒரு படியாக இதில் பங்கேற்கும் உணவங்காடி நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது.
உணவங்காடி நிலையங்களுக்கான கட்டுப்பாடு நவம்பர் 23ஆம் தேதி முதல் படிப்படியாகத் தளர்த்தப்பட்டு வருகிறது. தொடக்கமாக, 11 உணவங்காடி நிலையங்களும் 7 காப்பிக் கடைகளும் தடுப்பூசி போட்ட ஐவரை ஏற்க அனுமதிக்கப்பட்டது. இந்தப் பட்டியலில் ஆக அதிகமான எண்ணிக்கையிலான உணவங்காடி நிலையங்களைச் சேர்க்கும் அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.
தடுப்பூசி போட்டவர்களுக்கான இந்த உணவங்காடி நிலையங்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களும் ஒரு தடுப்பூசி மட்டும் போட்டுக்கொண்டவர்களும் உட்கார்ந்து சாப்பிட அனுமதி இல்லை. இருப்பினும் அவர்கள் தங்களுக்கான உணவை வாங்கிச் செல்லலாம்.
உணவங்காடி நிலையங்கள் தவிர, முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஐவரை அனுமதிக்கும் பட்டியலில் உள்ள காப்பிக் கடைகளின் எண்ணிக்கை திங்கட்கிழமை 71க்கு அதிகரித்தது. அதற்கு முன்னர் வரை அந்த எண்ணிக்கை 54ஆக இருந்தது. சிங்கப்பூர் உணவு முகவை (எஸ்எஃப்ஏ) இவற்றைப் பட்டியலிட்டுள்ளது.

