கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் குழு ஒன்றின் நிறுவனர் திருவாட்டி ஐரிஸ் கோ, நேற்று முன்தினம் ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் மன்னிப்பு கோரியிருந்தார்.
பொதுமக்கள் தொடர்புகொள்வதற்காக இயங்கி வரும் தொலைபேசி எண்களில் விடாது தொடர்புகொண்டே இருக்குமாறு டெலிகிராமில் தமது 'ஹீலிங் தி டிவைட்' குழுவில் உள்ளோரிடம் கூறியிருந்தது தொடர்பில் அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
"எந்த ஒரு முக்கிய காரணமும் இல்லாமல் தொலைபேசி அழைப்பு நிலையத்திற்குத் தொடர்ந்து அழைத்துக்கொண்டே இருங்கள் என்று கூறியது நிச்சயம் தவறுதான்," என்று பதிவில் அவர் குறிப்பிட்டு இருந்தார். திருவாட்டி கோ அக்டோபர் 11ஆம் தேதியன்று அந்தத் தவறான கருத்தை வெளியிட்டதாகக் கூறப்பட்டது.
தடுப்பூசி அடிப்படையில் வேறுபடுத்தப்பட்ட பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக அவர் இக்கருத்தை வெளியிட்டிருந்தார். இதற்கிடையே போலிஸ் விசாரணையில் தாம் உதவி வருவதை நேற்று முன்தினம் அவர் உறுதிப்படுத்தினார்.
சுகாதார அமைச்சு, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு, தேசிய பராமரிப்பு ஆகியவற்றின் தொடர்பு எண்களில் அழைத்து கருத்து தெரிவித்துவிட்டு, மறுநாளும் அழைக்குமாறு பிறரிடத்தில் கூறிய இருவரை போலிசார் விசாரித்து வருவதாக கடந்த வாரம் தெரிவிக்கப்பட்டது. அவர்களில் 45 வயது திருவாட்டி கோவும் ஒருவர். மற்றொருவர் 48 வயது திரு ரேமன்ட் இங் ஆவார்.

