முழுநேர வேலையில் இருக்கும் சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் ஆகியோரின் வாராந்திர வேலை நேரம் பத்து ஆண்டுகளுக்கு முன்பிருந்ததுடன் ஒப்பிடுகையில் குறைந்திருப்பதாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாண்டு முழுநேர வேலையில் இருக்கும் ஊழியர்கள் வாரத்துக்கு சராசரியாக 45 மணி நேரம் வேலை செய்வதாக அமைச்சு வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. 2010ஆம் ஆண்டில் இருந்த நிலையைவிட இது ஏறத்தாழ நான்கு மணி நேரம் குறைவு.
கடந்த ஆண்டு பதிவான 45.4 மணி நேர வேலையைவிட இவ்வாண்டுக்கான வாராந்திர வேலை நேரம் குறைவு. பல துறைகளில் வேலை செய்யும் முழுநேர ஊழியர்களின் வேலை நேரம் குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் கொவிட்-19 நெருக்கடிநிலையால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள துறைகளில் வேலை நேரம் அதிகம் குறைந்துள்ளது.
போக்குவரத்து, உணவு, பான சேவைகள், ஹோட்டல்கள், சில்லறை வர்த்தகங்கள் ஆகிய துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் வேலை நேரம் வெகுவாகக் குறைந்ததாக அமைச்சு கூறியது.
"குறைந்துள்ள வேலை நேரம், உணவகங்களில் உணவருந்துதல், பயணங்கள் ஆகியவற்றில் தொடரும் கட்டுப்பாடுகளை பிரதிபலிக்கிறது. வேலை அளவு பாதிக்கப்பட்டிருப்பதை இது காட்டுகிறது," என்று அமைச்சு கூறியது.
இதற்கு மாறாக, கடந்த ஓராண்டாகப் பெரும்பாலான துறைகளில் பகுதிநேரமாகப் பணிபுரியும் ஊழியர்களின் வேலை நேரம் அதிகரித்துள்ளது.
இவ்வாண்டு வாராந்திர அடிப்படையில் பகுதிநேர ஊழியர்கள் சராசரியாக 21.5 மணி நேரம் வேலை செய்தனர். கடந்த ஆண்டு பதிவான 21.2 மணி நேரத்தைவிட இது அதிகம்.
துப்புரவுப் பணியாளர்கள், தொழிலாளர்கள் ஆகியோரின் வேலை நேரம் அதிகரித்துள்ளது. ஆனால் நிபுணத்துவ, மேலாளர், நிர்வாகிகள், தொழில்நுட்பர் பிரிவு களைச் சேர்ந்த வேலைகளில் ஊழியர்களுக்கான சராசரி வாராந்திர வேலை நேரம் குறைந்துள்ளது.
"கொவிட்-19 சூழல் காரணமாக வர்த்தக, தொழில்துறை கட்டடங்களில் துப்புரவுப் பணியாளர்களுக்கான தேவை அதிகரித்திருப்பதை இந்தப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. சுகாதாரப் பராமரிப்புத் துறையின் உற்பத்திப் பிரிவு ஊழியர்களின் வேலை நேரம் அதி
கரித்துள்ளது," என்று மனிதவள அமைச்சு தெரிவித்தது.

