சிங்கப்பூரைச் சேர்ந்த 68 வயது முதியவர் ஒருவர் கம்போடியாவில் கைதுசெய்யப்பட்டு, போதைப்பொருள் கடத்தியதாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கம்போடியா காவல் துறை, மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் கோ சியோ சியான் என்ற அந்த சிங்கப்பூரரும், வியட்னாமைச் சேர்ந்த 27 வயது லி ஜியாங் ஃபோங், கம்போடியாவைச் சேர்ந்த 60 வயது டெய்ங் லீக் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
சாம்கர் மோன், டுவோல் கொளக் ஆகிய மாவட்டங்களில் நடந்த இந்தச் சோதனையின்போது எக்ஸ்டசி, மெத்தம்ஃபெடமின், கெட்டமின் உள்ளிட்ட 24 கிலோ போதைப் பொருளை போலிசார் கைப்பற்றினர்.
கைதுசெய்யப்பட்ட மூவர் மீதும் போதைப்பொருள் உற்பத்தி செய்தது, கடத்தியது, வைத்திருந்தது போன்ற குற்றச்சாட்டுகள் நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டன.
அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் கம்போடிய சட்டத்தின்படி ஒவ்வொருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.
கைதுசெய்யப்பட்ட கோ சியோ சியானின் வர்த்தகத் தரவுகளில் அவர் சிங்கப்பூரின் செங்காங் வட்டாரத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

