கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட அதிக அபாயம் இருப்பதாக மதிப்பிடப்படும் தற்காப்பு அமைச்சு மற்றும் சிங்கப்பூர் ஆயுதப் படையின் அத்தியாவசியப் பணியாளர்களுக்குக் கூடுதல் (பூஸ்டர்) தடுப்பூசித் திட்டம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
செயல் பிரிவுகள், செயல்பயிற்சி பெறும் பிரிவுகள், பயிற்சி அதிகாரிப் பள்ளி, நிபுணத்துவப் பயிற்சி அதிகாரிப் பள்ளி உள்ளிட்டவற்றைச் சேர்ந்த 30 வயதிற்குட்பட்டோருக்குக் கூடுதல் தடுப்பூசி வழங்கப்படும்.
சமூக அளவில் இப்போதைய கொவிட்-19 பரவல் போக்கின் அடிப்படையில் இடர் மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.
முன்னதாக, இரண்டாவது கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டு ஆறு மாதங்களாகி இருந்தால், 30 வயதும் அதற்கும் மேற்பட்ட சேவையாளர்களுக்கும் 30 வயதிற்குக் கீழுள்ளவர்களில் தொற்று அபாயம் அதிகமாக இருப்போருக்கும் கூடுதல் தடுப்பூசி வழங்கப்பட்டு வந்தது.

