மோசடிக் குற்றத்தை எதிர்நோக்கிய தொழில்நுட்பக் கல்விக் கழக (ஐடிஇ) கிழக்கு கல்லூரியின் முன்னாள் மாணவர் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த சமயத்திலும் மற்றொரு குற்றச்செயலில் ஈடுபட்டு உள்ளார். சக மாணவர் ஒருவரை அவர் கத்தியால் வெட்டிக் காயப் படுத்தியுள்ளார்.
ேநற்று நடந்த வழக்கு விசாரணையில் தற்போது 19 வயதாகும் பழனிதாஸ் ராமதாஸ், கத்தியால் காயம் ஏற்படுத்தியது, உரிமம் இல்லாமல் கார் ஒட்டியது உட்பட தம் மீது சுமத்தப்பட்ட எட்டுக் குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டார்.
பழனிதாஸ் தாக்குவதற்கு உடந்தையாக இருந்த மற்றொரு 18 வயது மாணவர் ஒருவர், ரொட்டி வெட்டும் கத்தியைக் கொடுத்து உதவி இருக்கிறார்.
இரு பதின்ம வயதினரும் தற்போது ஐடிஇயில் படிக்கவில்லை எனத் தெரிகிறது.
கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதையும் பழனிதாஸ் கத்தியால் தாக்குவதற்கு உடந்தையாக இருந்தையும் 18 வயது இளையர் 2019 அக்டோபர் மாதம் நடைபெற்ற விசாரணையில் ஒப்புக்கொண்டார்.
அவருக்கு 27 மாத நன்னடத்தைக் கண்காணிப்புத் தண்டனை விதிக்கப்பட்டது.
அவர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டபோது 17 வயதாக இருந்ததால் அவரது பெயரைச் சட்டப்படி வெளியிட முடியாது.
கடந்த ஆண்டு டிசம்பரிலிருந்து பழனிதாஸ் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடத் தொடங்கினார். பதின்ம வயது பெண் ஒருவரின் கைபேசியில் இருந்த 31 வயது நபரின் ஓட்டுநர் உரிமம், அடையாள அட்டை படங்களை அவருக்குத் தெரியாமல் தன்னுடைய கைபேசிக்கு அனுப்பி வைத்துக் கொண்டார்.
பின்னர் அந்த ஒட்டுநர் உரிமத்தைப் பயன்படுத்தி 'ஷேரியட்' கார் பகிர்வு நிறுவனத்திடமிருந்து வாடகைக்கு கார் எடுத்து பழனிதாஸ் ஓட்டினார். பழனிதாஸிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை.
இவ்வாண்டு பிப்ரவரி 15ஆம் தேதி பிணையில் விடுவிக்கப்பட்டபோது சக மாணவர் ஒருவர் பிரச்சினை கொடுப்பதாகக் கூறி மற்றொரு இளையரை அவர் கத்தி எடுத்து வரச் சொல்லியிருக்கிறார்.
பழனிதாசும் அவரது நண்பரும் உணவகத்தில் சக மாணவரைச் சந்தித்து வம்புக்கு இழுத்துள்ளனர்.
பின்னர் அந்த மாணவரை கார்பேட்டைக்கு வருமாறு அவர்கள் உத்தரவிட்டனர்.
மாணவர் அங்கு வந்ததும் பழனி தாஸ் அவரைக் கத்தியால் தாக்கினார். தப்பியோடிய மாணவர் தனது தந்தைக்குத் தகவல் கொடுக்க, காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது.
மாணவருக்கு இடது தோளிலும் காதிலும் காயம் ஏற்பட்டது. சாங்கி பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மாணவர் நான்கு நாள் மருத்துவ விடுப்பில் இருக்க நேரிட்டது.
அதன் பிறகு கத்தியைத் தூக்கிவீசிவிட்டு பள்ளியிலிருந்து பழனிதாஸ் வெளியேறினார். பிப்ரவரி 17ல் அவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
நேற்று விசாரணையின்போது நீதிபதி எஸ். ஜெனிஃபர் மேரி, நன்னடத்தைக் கண்காணிப்பு மற்றும் மறுவாழ்வுப் பயிற்சிக்கு இளையர் ஏற்றவரா என்பதை மதிப்பிடும்படி உத்தரவிட்டார். இதையடுத்து வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
வரும் ஜனவரி 11ஆம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது அவருக்கு தண்டனை விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

