சிங்கப்பூரில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள போதைப் பொருள் கடத்தல்காரர் நாகேந்திரன் தர்மலிங்கத்தின் வழக்கு தொடர்பாக மலேசியத் தலைவர்களின் மேல்முறையீட்டுக் கடிதங்கள் தொடர்பாக மலேசிய மாமன்னர் அப்துல்லா ரியாத்துதீனுக்கு அதிபர் ஹலிமா யாக்கோப் பதில் அளித்துள்ளதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு நேற்று தெரிவித்தது.
'மலேசியன் இன்சைட்' தளத்தின்படி, நாகேந்திரனுக்கு கருணை கோரி சிங்கப்பூர் அதிபர் ஹலிமாவுக்கு மாமன்னர் கடிதம் எழுதியதாக மலேசியாவின் வெளியுறவு துணை அமைச்சர் கமாருடின் ஜாஃபர் நவம்பர் 23ஆம் தேதி அன்று மலேசிய நாடாளுமன்றத்தில், தெரிவித்தார்.
நவம்பர் 12ஆம் தேதி அன்று, பிரதமர் லீ சியன் லூங்கும் வெளியுறவு அமைச்சர் விவியன் பால கிருஷ்ணனும் நாகேந்திரன் வழக்கு தொடர்பாக தங்கள் மலேசிய சகாக்களுக்கு பதிலளித்ததாக வெளியுறவு அமைச்சு கூறியது.
நவம்பர் 9ஆம் தேதி நாகேந்திரனுக்கு கொவிட்-19 இருப்பது உறுதி செய்யப்பட்டபோது அவரது மரணதண்டனை நிறுத்தப்பட்டது.
அவரது மரண தண்டனைக்கு எதிரான கடைசி முயற்சியாக மேல்முறையீட்டு நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்பட்ட அவர் சிறிது நேரம் குற்றவாளிக் கூண்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அவருக்கு நவம்பர் 10ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது.
2009ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு 42.72 கிராம் கலப்படமற்ற ஹெராயின் போதைப் பொருளைத் தமது தொடையில் கட்டி மறைத்ததாக நாகேந்திரனுக்கு 2010 ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
நாகேந்திரன் 2011ல் உயர் நீதிமன்றத்திலும், 2019ல் உச்ச நீதிமன்றத்திலும் தனது மேல்முறையீடுகளில் தோல்வியடைந்தார்.
அங்கு தலைமை நீதிபதி உட்பட ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு அவரது மனுக்களை நிராகரித்தது. அதிபரிடம் அனுப்பப்பட்ட அவரது கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டது.
நாகேந்திரனுக்கு 18 வயதுக்குக் குறைவானோருக்கு இருக்கும் மனநிலை உள்ளதாக வழக்கறிஞர் எம்.ரவி இந்த ஆண்டு நவம்பர் மாதம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
நாகேந்திரனுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதில் இருந்து விலக்கு அளிக்க நீதித்துறை கருணையைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவரது மனநலப் பரிசோதனைகள் மற்றும் மனநிலை குறித்த அறிக்கைகள் நிலுவையில் உள்ளன என்பதைச் சுட்டிக்காட்டி அவர் வாதிட்டார்.
இருப்பினும், அவர் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள வரம்பிற்குட்பட்ட அறிவார்ந்த செயல்பாட்டைக் கொண்டிருந்தார் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அவர் எந்தவிதமான அறிவுசார் இயலாமையால் பாதிக்கப்படவில்லை என்று நீதிபதியால் கண்டறியப்பட்டது.
இதையடுத்து மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

