'ஒன் பொங்கோல்' என்ற ஒருங்கிணைந்த சமூக மையம் அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் இருந்து கட்டம் கட்டமாகத் திறக்கப்படும்.
அந்த மையத்தில் நூலகம், 700 இடங்களைக் கொண்ட உணவங்காடி நிலையம், குழந்தைப் பராமரிப்பு நிலையம், மூத்த குடிமக்கள் நிலையம் வரை பல வசதிகளும் இருக்கும்.
கிட்டதட்ட 200,000 குடியிருப்பாளர்களுக்கு அந்த மையம் சேவையாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2.8 ஹெக்டர் நிலப்பரப்பில் உருவாகும் ஐந்து மாடி கட்டடத்தில் அது அமையும்.
அந்தக் கட்டடம் பொங்கோல் எம்ஆர்டி நிலையம், பொங்கோல் நகர சதுக்கம், வாட்டர்வே பாயிண்ட் கடைத்தொகுதி, பொங்கோல் வட்டார்வே பூங்கா, குடியிருப்புப் புளோக்குகள் ஆகியவற்றுடன் நடைபாதை மூலம் தொடர்பு கொண்டு இருக்கும்.
'அவர் தெம்பனிஸ் ஹப்', 'பிடோக் ஹார்ட்பீட்' ஆகிய இதர இரண்டு ஒருங்கிணைந்த சமூக மையங்களைத் தொடர்ந்து இந்தப் புதிய மையம் அமைகிறது.
சுகாதார, தொடர்பு தகவல் மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி நேற்று நடந்த கட்டுமான நிறைவு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். கொரோனா தொற்று காரணமாக கட்டுமானம் தடைப்பட்டாலும்கூட புதிய மையம் கட்டம் கட்டமாகக் குறித்த நேரத்தில் திறக்கப்படும் என்று அவர் கூறினார். ஏறத்தாழ 80 விழுக்காடு கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
மக்கள் கழகம், வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், சுகாதார அமைச்சு உள்ளிட்ட பல அமைப்பு களும் அந்த மையத்தில் ஒரே கூரையின்கீழ் பல வசதிகளையும் சேவைகளையும் வழங்கும்.
ஐந்தாவது மாடியில் பல்நோக்கு மண்டபம் இருக்கும்.
அதில் நான்கு பூப்பந்து விளையாட்டுக் கூடங்கள், 600 பேர் அமர்ந்து நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கான வசதிகள், இசைக் கூடங்கள் சமூகத் தோட்டம் இருக்கும்.
பொங்கோல் வட்டார நூலகம் ஐந்து மாடிகளிலும் அமைந்து இருக்கும். அங்கு உடற்குறையோர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன்படும் சிறப்பு தொகுப்புகள் இருக்கும்.
குழந்தைப் பராமரிப்பு நிலையம் அடுத்த ஆண்டு 500 பாலர்பள்ளி குழந்தைகளுக்கு இடமளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூத்தோர் பராமரிப்பு நிலையம் முழுநேர செயல்திட்டங்களை அமல்படுத்தும். புதிய மையத்தில் உணவு, பானக் கடைகளுக்கும் குறை இருக்காது.
200க்கும் மேற்பட்ட அரசாங்க அமைப்புகளின் சேவைகளை அங்கு மக்கள் எளிதாக எட்டலாம்.

